பிள்ளைகளின் உதவியுடன் ஜோடியாக இறக்கப் போகும் பெல்ஜியம் தாத்தா, பாட்டி
ப்ருசெல்ஸ்: பெல்ஜியத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி ஒருவர் இறந்தால் மற்றவர் தனியாக வாழ வேண்டும் என்ற பயத்தில் தங்களை கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை விடுக்க அதை அவர்களின் குழந்தைகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பெல்ஜியம் தலைநகர் ப்ருசெல்ஸைச் சேர்ந்தவர் பிரான்சிஸ்(89). அவரது மனைவி ஆன்(86). அவர்களுக்கு 3 பிள்ளைகள். கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரான்சிஸ் கடந்த 20 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆனுக்கு கண் பார்வை மங்கிவிட்டது. மேலும் அவருக்கு சுத்தமாக காது கேட்கவில்லை. அவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகத் தான் செல்வார்கள். ஒருவர் மட்டும் வெளியே சென்று வீடு திரும்பவில்லை என்றால் என்ன செய்வது என்ற பயம் அவர்களுக்கு உள்ளது.
அவர்களை அவர்களின் 3 பிள்ளைகளும் நன்றாக கவனித்துக் கொள்கின்றனர். இருப்பினும் ஒருவர் இறந்துவிட்டால் மற்றொருவர் தனியாக வாழ வேண்டுமே என்ற பயத்திலேயே உள்ளனர் பிரான்சிஸும், ஆனும். இந்நிலையில் அவர்கள் தங்களின் 64வது திருமணநாளான வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி தூக்க மாத்திரை சாப்பிட்டு தலைகளில் பிளாஸ்டிக் பைகளை கட்டிக் கொண்டு தற்கொலை செய்ய முடிவு செய்தனர். ஆனால் அவர்களுக்கு தற்கொலை செய்ய துணிவு வரவில்லை.
இதையடுத்து தங்களை கருணை கொலை செய்யுமாறு அவர்கள் பிள்ளைகளிடம் தெரிவிக்க அவர்களும் உரிய மருத்துவர்களை தேடி வருகிறார்கள்.
பெல்ஜியமில் கடந்த 2002ம் ஆண்டு கருணைக் கொலை செய்வது சட்டத்தால் அனுமதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.