சுடுகாட்டிலேயே இடமில்லை.. சுற்றிலும் சடலங்கள்.. நிமிஷத்துக்கு ஒருவர் பலி.. கொரோனா பிடியில் பிரேசில்
தொற்று எண்ணிக்கையில் 2வது இடத்துக்கு பிரேசில் முன்னேறி உள்ளது
பிரேசில்: பிரேசில் நாடு கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 2ம் இடத்திற்கு முன்னேறி பீதியை கிளப்பி வருகிறது.. நிமிஷத்துக்கு ஒருவர் இறந்து வருகிறார்களாம்.. அவர்களை புதைக்க கூட இடமில்லாமல் தவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளை மொத்தமாக பீடித்து கொண்டுள்ளது கொரோனா.. இதில் முக்கியமான நாடாக பிரேசில் உள்ளது.. நேற்று வரை 3-வது இடத்தில் இருந்த பிரேசில் இன்று 2வது இடத்துக்கு வந்துவிட்டது.

இதுவரைக்கும் அந்நாட்டில் 6,46,006 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்... 35,047 பேர் உயிரிழந்துள்ளனர்.. 3 லட்சத்துக்கு அதிகமானவர்கள் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.
குணமடைந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையோ உயர்ந்து கொண்டே போகிறது.. பிரேசிலின் மக்கள்தொகை 210 மில்லியன்.. ஆரம்பத்தில் இருந்ததைவிட இந்த 2 வாரமாகவே பிரேசில் கதிகலங்கி வருகிறது.. ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், 2வது இடத்துக்கு பிரேசில் வந்துவிட்டது. இவ்வளவு பாதிப்பு என்பதால்தான், அமெரிக்காவுக்கு அம்மக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திடீரென பிரேசிலில் இவ்வளவு பாதிப்பு எப்படி ஏற்பட்டது? என்ற அதிர்ச்சியில் மக்கள் மூழ்கி உள்ளனர்.. இதற்கெல்லாம் காரணம் நடவடிக்கையில் பிரேசில் அதிபரின் அலட்சியம்தான் என்றும் பல்வேறு நாடுகளில் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. ஏற்கனவே பிரேசிலில் இனி வரும் நாட்களில் தொற்று அதிகரிக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கையும் செய்தது.
அத்துடன், எந்த காரணத்தை கொண்டும் ஊரடங்கை தளர்த்தி விடாதீர்கள் என்றும் எச்சரித்திருந்தது.. ஆனால் தங்களுக்கு யாரும் அட்வைஸ் செய்யகூடாது என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரா உலக சுகாதார நிறுவனத்தை விமர்சித்துள்ளார். மேலும் உலக சுகாதார அமைப்பு ஒரு தலைபட்சமான இந்த அரசியல் நிலைப்பாட்டை நிறுத்தி கொள்ளாவிட்டால் உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகி விடுவோம்" என்றும் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், பிரேசிலில் நிமிடத்துக்கு ஒருவர் இறந்து கொண்டிருக்கிறார்களாம்.. அவர்களை புதைக்ககூட சுடுகாட்டில் இடமில்லை என்பதால், அப்படி அப்படியே சடலங்களை மயானத்தில் போடும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.. இப்படி ஒரு அவலமான, அபாயகரமான நிலைமையை அதிபர் எப்படி கட்டுக்குள் கொண்டு வருவார் என தெரியாமல் மக்கள் விழித்து கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications