ஆரம்பமே இப்படியா.. Deepseek மீது சைபர் தாக்குதல்.. யாராலும் புதிதாக கணக்கு தொடங்க முடியாது!
பெய்ஜிங்: சீனாவை சேர்ந்த டீப்சீக் ஏஐ டூல் நேற்று வெளியான நிலையில், உலகெங்கும் அதுதான் பேசுபொருளாக இருந்தது. இதற்கிடையே டீப்சீக் வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், அது சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தற்போது டீப்சீக் தளத்தில் யாரும் புதிதாகக் கணக்கு தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த காலத்தில் ஏஐ நிறுவனங்கள் தான் உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் என உலகின் டாப் நிறுவனங்கள் அனைத்துமே ஏஐ துறையில் கவனம் செலுத்தி வருகிறது.

இதுநாள் வரை ஏஐ துறையில் அமெரிக்க நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வந்தன. சாட்ஜிபிடி, ஜெமினி, மெட்டா ஏஐ என அனைத்துமே அமெரிக்க நிறுவனங்களின் ஏஐ டூலாகவே இருந்து வந்தது.
சீனாவின் டீப்சீக்:
இதற்கிடையே அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் சீனாவின் டீப்சீக் நிறுவனம் புதிய ஏஐ டூலை வெளியிட்டுள்ளது. டீப்சீக் ஆர் 1 என்ற இந்த செயலி நேற்று தான் வெளியிடப்பட்டது. அப்போது முதலே உலகெங்கும் பேசப்படும் ஒரு ஏஐ டூலாக இது உருவெடுத்துவிட்டது. இதில் உள்ள அதிநவீன வசதிகள் அனைவரையும் வியக்க வைப்பதாக இருக்கிறது.
சைபர் தாக்குதல்:
ஆனால், முதல் நாளிலேயே டீப்சீக் செயலி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. டீப்சீக் ஏஐ மாடலை குறிவைத்து சைபர் தாக்குதல் நடந்துள்ளது. இதை அந்த நிறுவனமும் உறுதி செய்துள்ளது. இதனால் டீப்சீக் செயலியில் புதிதாகக் கணக்கு தொடங்குவது தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது யாராலும் புதிதாக டீப்சீக் ஏஐ டூலை பயன்படுத்தக் கணக்கு தொடங்க முடியாது. அதேநேரம் ஏற்கனவே கணக்கை வைத்துள்ளோர், தொடர்ந்து பயன்படுத்தலாம். அதில் எந்தவொரு சிக்கலும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.
உலகெங்கும் கவனத்தை ஈர்த்த சீன ஏஐ டூல் முதல் நாளே சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த சைபர் தாக்குதலை நடத்தியது யார்.. இதனால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. டேட்டா எதாவது லீக் ஆகி இருக்கிறதா என்பது குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
டீப்சீக் பின்னணி:
கடந்த 2023ம் ஆண்டு டீப்சீக் நிறுவனம் தென்கிழக்கு சீனாவைச் சேர்ந்த ஹாங்சோ நகரில் தொடங்கப்பட்டது. லியாங் என்பவர் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறார். இது இப்போது ஆர்1 மற்றும் ஆர்1 ஜீரோ என்று இரு மாடல்களாக வெளியிட்டுள்ளது.. அதேநேரம் தற்போது மக்களால் ஆர் 1 மாடலை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செலவு குறைவு:
டீப்சீக் மாடலை இயக்க ஆகும் செலவு ரொம்பவே குறைவு.. உதாரணத்திற்கு சாட்ஜிபிடியை இயக்க 10 லட்சம் இன்புட் டோக்கன்களுக்கு 15 டாலர் செலவாகும் சூழலில் டீப்சீக் மாடலில் அதே 10 லட்சம் இன்புட் டோக்கனை இயக்க 0.55 டாலர் மட்டுமே செலவாகும். அதாவது சாட்ஜிபிடியை காட்டிலும் டீப் சீக் மாடலை இயக்க 27 மடங்கு செலவு குறைவாகவே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சாட்ஜிபிடியின் புதிய வெர்ஷனை பயன்படுத்தக் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், டீப்சீக் மாடல் முழுக்க முழுக்க இலவசமாகும்.












Click it and Unblock the Notifications