இந்திய பெருங்கடலில் திடீர் புயல்: மாயமான விமானத்தை தேடும் பணி பாதிப்பு
பெர்த்: இந்திய பெருங்கடல் பகுதியில் புயல் வீசுவதால் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி இன்று ஒரு நாளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தது. இதையடுத்து இந்திய பெருங்கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது.
தேடல் பணி தீவிரமாக நடந்து வருகிறபோதிலும் விமானம் குறித்து எந்தவித தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
புயல்
இந்திய பெருங்கடலில் புயல் வீசுவதால் மாயமான விமானத்தை தேடும் பணி இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதாவது மாயமான விமானத்தை தேட விமானங்கள் இன்று பயன்படுத்த மாட்டாது.
கப்பல்கள்
விமானங்கள் மூலம் தேடும் பணி நிறுத்தப்பட்டபோதிலும் இன்று 10 கப்பல்கள் மலேசிய விமானத்தை தேடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளில்லா நீர்மூழ்கி
ஆளில்லா நீர்மூழ்கி கப்பலான ப்ளூஃபின் 21 9 முறை கடலின் தரை பரப்புக்கு சென்று விமானத்தை தேடியுள்ளளது. ஆனால் இதுவரை விமானம் பற்றி முக்கிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
சிக்னல்கள்
கருப்புப் பெட்டியின் சிக்னல்கள் வந்த இடத்தில் தான் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் விமானத்தை தேடி வருகிறது. அது இதுவரை மூன்றில் இரண்டு பங்கு இடத்தில் விமானத்தை தேடியுள்ளது.
வானிலை
வானிலை நன்றாக இருந்தால் ஒரு வாரத்திற்குள் நீருக்கு அடியில் விமானத்தை தேடும் பணி முடிவடைந்துவிடும் என்று தேடல் குழுவினர் தெரிவித்துள்ளனர்.