தாதா தாவூத் இங்கு இல்லையே... இந்தியாவின் புகாருக்கு பாகிஸ்தான் மறுப்பு
இஸ்லாமாபாத்: மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் முக்கிய சதிகாரரான தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இருக்கிறார் என்ற இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்துள்ளது.
கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் முக்கிய சதிகாரராக அடையாளம் காணப்பட்ட நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், இந்தியாவில் இருந்து தப்பி ஓடி தலைமறைவானார்.

மும்பை குண்டு வெடிப்புக்கு சதி திட்டத்தை உருவாக்கி கொடுத்ததுடன் நிதி உதவியும் வழங்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தாவூத் இப்ராகிமுக்கு அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு இருக்கிறது என அமெரிக்கா நம்புகிறது. எனவே அவரை உலகளாவிய தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்து சொத்துக்களை முடக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதுமட்டுமல்ல நிழல் உலக தாதாவாக விளங்கிய அவர் பல சட்டவிரோத வியாபாரங்களிலும் ஈடுபட்டு வந்தவர். இவரை பிடிக்க சர்வதேச போலீஸ் (இண்டர்போல்) சிவப்பு எச்சரிக்கை நோட்டீசு பிறப்பித்தும் தாவூத் இப்ராகிம் இன்னும் சிக்காமல் இருக்கிறார்.
தலைமறைவாக உள்ள தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் வசித்து வருவதாக வெளியான தகவல்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே நேற்று முன்தினம் டெல்லியில் அளித்த பேட்டியில், ‘எங்களுக்கு கிடைத்த தகவல்படி தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் இருக்கிறார்' எனக் குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம், ‘தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் இல்லை என்பதை இந்திய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்து விட்டோம். இந்த விவகாரம் கடந்த காலம் தொட்டு கூறப்படுகிறது. நாங்கள் ஆய்வு செய்த பிறகே அவர் இங்கு இல்லை என்று கூறுகிறோம்' என்றார்.
இந்திய பாதுகாப்பு துறையினர் கடந்த 2 ஆண்டுகளில் தீவிரமாக செயல்பட்டு தலைமறைவு தீவிரவாதிகள், குண்டு வெடிப்பு சதிகாரர்கள் பலரை கைது செய்துள்ளனர். அதில் சயித் சபிவுதீன் அன்சாரி என்கிற அபு ஜிந்தால், பசிஹ் முகமது, அப்துல் கரீம் துண்டா, வாசின் பத்கால் ஆகியோர் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications