பாகிஸ்தானில் பெஷாவர் பள்ளி தாக்குதல்... 6 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை
இஸ்லமாபாத் : பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவ பள்ளியில் நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு காரணமான 6 தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பாகிஸ்தானில் பெஷாவர் ராணுவ பள்ளியில் 6 தலீபான் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புகுந்து, 132 குழந்தைகள் உள்பட 148 பேரை சுட்டுக்கொலை செய்த சம்பவம் உலக நாடுகளிடையே அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம், பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் அரசையும் உலுக்கியது. இந்த தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்ற விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் பெஷாவர் கொடூர தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான 7 பேர் மீது பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இன்று இவ்வழக்கில் தொடர்புடைய தீவிரவாதிகள் 6 பேருக்கு மரண தண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்களை தவிர்த்து கராச்சியில் 2011 ஆம் ஆண்டு ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ நீதிமன்ற செய்தி தொடர்பாளர் அசிம் பஜ்வா உறுதிப்படுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications