பிரேசிலில் பயங்கர நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 46-ஆக உயர்வு.. நூற்றுக்கணக்கானோர் மாயம்
பிரேசிலின் சா பெளலோ மாகாணத்தில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகளும், கட்டிடங்களும் பூமியில் புதைந்தன.
பிரேசிலியா: பிரேசில் நாட்டில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 46- ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
பிரேசிலில் பல்வேறு மாகாணங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், சா பெளலா மாகாணத்தில் இந்த திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், பிரேசில் ராணுவத்தினர் ஆகியோர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்தடுத்து பயங்கரம்
நடப்பாண்டின் தொடக்கமே பேரிடருடன்தான் ஆரம்பித்திருக்கிறது. துருக்கி, சிரியா நாடுகள் இம்மாதத் தொடக்கத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் உருக்குலைந்து போயுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், நேற்று துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஒருபுறம் இருக்க, பிரேசிலில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கொட்டி தீர்க்கும் கனமழை
பிரேசிலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கடலோர மாகாணங்களில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளன. மழை நீர் வெள்ளம் ஒருபுறம் இருக்க, கடல் சீற்றமும் ஏற்பட்டதால் பல கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

பயங்கர நிலச்சரிவு
இந்நிலையில்தான், பிரேசிலின் சா பெளலோ மாகாணத்தில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பல வீடுகளும், கட்டிடங்களும் பூமியில் புதைந்தன. தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், துரிதமாக செயல்பட்டு பலரை மீட்டு வருகின்றனர். இதுவரை 46 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். எனினும், நூற்றுக்கணக்கானோர் மாயமானதாக கூறப்படுகிறது. எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணிகள் பாதிப்பு
இந்த சூழலில், சா பெளாலோ மாகாணத்தில் இடைவிடாது கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பிரேசில் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, அடுத்த 15 நாட்களுக்கு மேலும் பலத்த மழையும், சூறைக்காற்றும் வீசும் என பிரேசில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சா பெளலோ மாகாணத்தில் உள்ள 6 நகரங்களில் அந்நாட்டு அரசு பேரிடர் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications