மகளைப் பழி தீர்ப்பதாகக் கூறி இரு பேரக்குழந்தைகளைக் கொன்ற மனநிலை பாதித்த பாட்டி...
வாஷிங்டன்: அமெரிக்காவில் தனது மகளைப் பழி தீர்ப்பதாகக் கூறி அவரது இரண்டு மகன்களைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் பாட்டி ஒருவர்.
அமெரிக்கா நாட்டை சேர்ந்த டெப்ரா டெனிசன் ( 47) என்பவரது மகள் பிரெண்டா பெர்ரி. இவரது கணவர் ஜெரேமி. இந்த தம்பதியர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் ஆல்டன் பெர்ரிக்கு இரண்டு வயதும், இளையவன் ஆஷ்டன் பெர்ரி 6 மாதமும் ஆகிறது.
இந்நிலையில் கடந்தாண்டு குழந்தைகளை சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார் டெப்ரா. இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
தீவிர விசாரணையில் டெப்ரா மனநிலை பாதித்திருந்ததாக தெரியவந்தது. மேலும், டெப்ராவின் கடைசிக் கடிதம் ஒன்று கைப்பற்றப் பட்டது. அதில் மகளைப் பழி வாங்குவதற்காகவே தான் இவ்வாறு செய்ததாக அவர் எழுதியிருந்தார்.
இது தொடர்பாக பெர்ரியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ‘தன்னை தன் கணவரிடமிருந்து பிரிக்க தனது தாயார் முயற்சித்ததாகவும், இதற்காக தன்னைப் பற்றிய தவறான தகவல்களை தனது கணவரிடம் அவர் தெரிவித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே டெப்ராவின் மகன் ஆலன் போதை பொருள் தொடர்பான கொலையை அடுத்து 32 வருட சிறை தண்டனை பெற்றுள்ளதும் தெரிய வந்தது. கடந்த 20 வருடங்களில் டெனிசன் 6 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்த விசாரணையில், டெனிசனின் கணவரான ஜேன்ஸ் டெனிசன் போலீசாரிடம் கூறும்போது, டெனிசன் பயன்படுத்திய துப்பாக்கி என்னுடையது. என்னுடைய வீட்டில் குண்டுகள் நிரப்பப்படாத நிலையில் அதனை வைத்திருந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுவரை கிடைத்த தகவல்களை அடுத்து இந்த வழக்கு தற்பொழுது மூடப்பட்டு விட்டது என்றும் அடுத்த விசாரணை எதுவும் இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications