2 வாரம் கெடு.. ஈரான் விஷயத்தில் 'பேக்' அடிக்கிறாரா டிரம்ப்? வல்லுநர்கள் சொல்வது இதுதான்
வாஷிங்டன்: டிரம்ப் நடவடிக்கைகள் முதலில் ஆக்ரோஷமாகவம், பின்ன அமைதியாகவும் இருப்பதாக தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவருக்கு 'Trump Always Chickens Out'(TACO) என்கிற பட்டப் பெயரும் சூட்டப்பட்டிருக்கிறது. ஈரான் விஷயத்திலும் அவர் TACO-ஆக இருப்பாரா? அல்லது நிஜமாகவே களத்தில் இறங்குவாரா? என்பது குறித்து கேள்விகள் எழுந்திருக்கின்றன.
இஸ்ரேல் - ஈரான் போரில் அமெரிக்கா தலையிடுவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு வாரங்களில் முடிவு செய்வார் என்று வெள்ளை மாளிகை செய்தி செயலாளர் கரோலின் லெவிட் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் டிரம்ப் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது, அவர் கடினமான முடிவை எடுத்து பின்னர் அதை நீர்த்துப்போகச் செய்வது அல்லது முற்றிலுமாக மாற்றுவது போன்ற வழக்கமான அணுகுமுறையை காட்டுகிறது என்று விமர்சனங்கள் வந்திருக்கின்றன.

ஈரான் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இஸ்ரேலுடன் சண்டை தொடங்கியபோது, இதுபற்றி பேச, ஈரான் அதிகாரிகள் தன்னை சந்திக்க முயன்றதாகவும், அதற்காக வெள்ளை மாளிகைக்கு கூட வர இருந்ததாகவும், ஆனால் காலம் தாழ்ந்துவிட்டதால் உடனே சரணடைய வேண்டும் என்று சொல்லி பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுத்துவிட்டதாகவும் டிரம்ப கூறினார். பின்னர், இந்த பிரச்சனையில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறியிருந்தார். இதன் பின்னர் என்ன நடந்தது?
தனது நிலைப்பாட்டை மாற்றி, பேச்சுவார்த்தைக்கு இன்னும் வாய்ப்பு இருப்பதாக அறிவித்தார். யாரு சாமி நீ என்று கேட்கும் அளவுக்கு டிரம்பின் நிலைப்பாடு அடிக்கடி மாறி வருகிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.
டிரம்ப் பல்வேறு விஷயங்களால் முடிவெடுக்க முடியாமல் சிக்கலில் உள்ளார். இருப்பினும், அவரது இரண்டு வார காலம் அவகாசம் கோரியிருப்பதன் மூலம், நன்கு திட்டமிடப்பட்ட நகர்வை முன்னெடுக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
கடற்படை அட்மிரல் ஜேம்ஸ் ஜி. ஸ்டாவ்ரிடிஸ் இது குறித்து கூறுகையில், "டிரம்ப் ஈரானியர்களை ஏமாற்றி அவர்களின் பாதுகாப்பை தளர்த்தி, திடீர் தாக்குதல் நடத்தலாம். இது ஒரு தந்திரம். டிரம்பின் குழப்பமான பேச்சு பெரிய அளவில் கவனம் பெறாத நிலையில், சர்வதேச அளவில் இந்த பிரச்சனையின் மீதான எதிர்பார்ப்பு குறைய தொடங்கியுள்ளது. ஆனால், மறுபுறம் அமெரிக்க இராணுவம் மத்திய கிழக்கில் உள்ள சில விமானங்களையும் கப்பல்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.
கத்தாரில் உள்ள அல் உடேத் தளத்தில் அதிக அளவில் விமானங்களும், பஹ்ரைனில் உள்ள கடற்படை தளத்தில் கூடுதல் கப்பல்களும் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் இரண்டாவது விமானம் தாங்கி கப்பல் ஒன்று இப்போதுதான் அந்நாட்டிலிருந்து புறப்பட்டிருக்கிறது. அது வந்து சேர சுமார் 2 வாரங்கள் வரை ஆகலாம். எனவேதான் டிரம்ப் இந்த அவகாசத்தை கேட்டிருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.
மற்றபடி, பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் பேசியது, ஐரோப்பிய நாடுகளின் மனதை குளிர்விக்கத்தான். ஏனெனில், ஈரான் விஷயத்தில் அமெரிக்காவின் முடிவு பல ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. எனவே அந்நாடுகளுடனான உறவை சரிக்கட்டவே, பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications