"மது போதை.. பார்ட்டி.." காரை 100+ கிமீ வேகத்தில் ஓட்டிய மாணவர்கள்! அடுத்த நொடி உடல் சிதறி 6 பேர் பலி
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நள்ளிரவு நேரத்தில் அதிவேகமாகச் சென்ற கார் லாரி ஒன்றின் மீது மோதியதில் மிக மோசமான விபத்து ஏற்பட்டது. இதில் 6 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், ஒருவர் படுகாயமடைந்தார். இதற்கிடையே விபத்து நடப்பதற்கு சில மணி நேரம் முன்பு அவர்கள் மது குடிப்பது போன்ற வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி சென்று விபத்துகள் நடந்து வருகிறது. அப்படியொரு மோசமான விபத்து தான் உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது.

விபத்து: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனின் ஒஎன்ஜிசி சவுக் என்ற பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் வேகமாகச் சென்ற கார் ஒன்று லாரியின் பின்புறம் மோதியதில் காரில் பயணித்த ஆறு பேர் உயிரிழந்தனர். ஒரு மாணவர் படுகாயமடைந்தார்.
விபத்தில் சத்தம் கேட்டு அதில் சிக்கியவர்களை மீட்க அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்து இருந்தது. அதீத வேகத்தில் வந்து இருந்ததால் மாணவர்களின் உடல் நசுங்கியும், உடல் உறுப்புகள் கட் ஆகியும் இருந்தன. இது தொடர்பான கொடூரமான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் இப்போது பரவி வருகிறது.
பார்ட்டி: இதற்கிடையே விபத்து குறித்த சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது விபத்தில் சிக்குவதற்கு முன்பு அந்த மாணவர்கள் மது குடித்து பார்ட்டி செய்துள்ளனர். அந்த மாணவர்கள் பி.எம்.டபுள்.யூ கார் ஒன்றை ஓவர்டேக் செய்ய முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
டிரக் மீது கார் அதீத வேகத்தில் மோதியதால் உள்ளே இருந்த மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். வாகனம் முழுமையாகச் சிதைந்து போனது. அந்தளவுக்கு வேகமாக அவர்கள் வாகனத்தை ஓட்டியுள்ளனர். இந்தச் சூழலில் தான் விபத்துக்கு சில மணி நேரம் முன்பு அவர்கள் பாட்டு கேட்டுக் கொண்டே மதுக் குடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
உறுதியாக தெரியவில்லை: இதனால் மதுபோதையில் காரை ஓட்டி அந்த விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம் பிரேதப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதனால், மாணவர்கள் போதையில் இருந்தார்களா என்பதை போலீசாரால் உறுதி செய்ய முடியவில்லை.
செவ்வாய்க்கிழமை அதிகாலை நடந்த இந்த விபத்தில் காரில் இருந்த ஆறு பயணிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 25 வயதான சித்தேஷ் என்பவர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் அருகே உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
காப்பாற்றப்பட்டது எப்படி: சித்தேஷ் ஐபோன் பயன்படுத்தி வந்துள்ளார். விபத்து நடந்த உடனேயே அவரது ஐபோன் போலீசாரின் கட்டுப்பாட்டு அறைக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறது. இதன் காரணமாகவே உயிருக்குப் போராடிய அவரை துரிதமாகச் செயல்பட்டு போலீசாரால் காக்க முடிந்துள்ளது.
சித்தேஷின் இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுள்ளார். அவருக்கு இன்னும் சுயநினைவு திரும்பவில்லை. இன்னும் எதுவும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், மகன் மது குடித்துவிட்டு கார் ஓட்டியதாக யாரும் ஊகிக்க வேண்டாம் என்று சிதேஷின் தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.
உயிரிழந்த ஆறு பேரும் 19 முதல் 24 வயதான கல்லூரி மாணவர்கள் எனத் தெரிகிறது. விபத்துக்கான காரணத்தை அறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஓட்டுநர் குடிபோதையில் இருந்தாரா என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், இப்போது அவர்கள் மது குடிப்பது போன்ற வீடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications