அமெரிக்காவில் இருந்து கொத்து கொத்தாக திருப்பி அனுப்பப்படும் இந்திய மாணவர்கள்: என்ன தான் தீர்வு?
ஹைதராபாத்: அமெரிக்காவுக்கு படிக்கச் சென்று உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 16 மாணவர்கள் ஹைதராபாத் விமான நிலையத்தில் 6 மணிநேரம் காத்திருக்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்த 16 மாணவர்கள் கல்லூரிகளில் படிக்க அமெரிக்கா சென்றனர். ஆனால் அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நியூயார்க் நகரில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட 16 மாணவர்களும் கடந்த சனிக்கிழமை இரவு ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஆனால் அவர்கள் பயணம் செய்த டிக்கெட்டில் பிரச்சனை என்று கூறி மாணவர்களை 6 மணிநேரம் விமான நிலையத்தில் காக்க வைத்துள்ளனர் அதிகாரிகள்.
மேலும் மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்க அதிகாரிகள் வழக்கத்திற்கு அதிகமாக நேரம் எடுத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீநகரில் இருந்து ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்த தெலுங்கானா துணை முதல்வர் முகமது மஹ்மூது அலியிடம் இது குறித்து மாணவர்களின் பெற்றோர் முறையிட்டனர். அவரின் குறுக்கீடால் மாணவர்கள் விமான நிலையத்தில் இருந்து கிளம்ப முடிந்தது.
16 பேரும் நியூயார்க் விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக சிகாகோவுக்கு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 14 பேர் விமான நிலையத்தோடு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களிடம் உரிய ஆவணங்கள் இருந்தும் இல்லை என்று கூறி எங்களை திருப்பி அனுப்பி வைத்துவிட்டனர் என்கின்றனர் மாணவர்கள். முன்னதாக கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட 2 கல்லூரிகளில் சேர்ந்த 20 இந்திய மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.