மணிப்பூரில் விஸ்வரூபம் எடுத்த இன மோதல்! போக்குவரத்து துண்டிப்பு.. 2 மாதங்களுக்கு 144 தடை.. பின்னணி
இம்பால்: வகுப்புவாத பதற்றத்தையடுத்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த வன்முறையில் வாகனம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் மேற்குறிப்பிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
பள்ளத்தாக்கு மாவட்டம் முழுவதும் சுமார் 2 மாதங்களுக்கு இந்த 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தோண்ட தோண்ட சடலம்.. மணிப்பூர் மண்சரிவில் பலி எண்ணிக்கை 80 ஆக உயர்வு.. 50 பேர் கதி என்ன?
உத்தரவு
மணிப்பூர் மாநிலத்தில் முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமையான நேற்று ஃபூகாக்சாவ் இகாங்கில் பகுதியில் 4 நபர்களால் வாகனம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனையடுத்து பிஷ்னுபூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் அளித்த புகாரைத் தொடர்ந்து மணிப்பூர் முழுவதும் ஐந்து நாட்களுக்கு மொபைல் டேட்டா சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக உள்துறை சிறப்புச் செயலர் ஞான பிரகாஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சேவை துண்டிப்பு
இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூர் முதன்மையானதாகும். இந்நிலையில் இம்மாநிலத்தின் வளர்ச்சிக்காக 'மணிப்பூர் (மலைப் பகுதிகள்) தன்னாட்சி மாவட்ட கவுன்சில் மசோதா 2021-வை' சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும் என மாநிலத்தின் 'மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர் சங்கம்' சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தேசிய நெடுஞ்சாலைகளை மாணவர் சங்கத்தினர் இடை மறித்தனர். இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
எதிர்ப்பு
இது ஒருபுறம் இருக்க மாணவர் அமைப்பின் இந்த நடவடிக்கையை எதிர்த்து 'மெய்டே லீபுன்' மற்றொரு அமைப்பு மாணவர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தை பூட்டியது. மட்டுமல்லாது மக்களை தவறாக வழிநடத்துவதை அனுமதிக்க மாட்டோம் என்றும் அமைப்பு கூறியுள்ளது. இதனையடுத்து இரு தரப்பினருக்கிடையே மோதல் வெடித்தது. இது இன ரீதியான மோதல்களாக பரினமித்தது. இதனையடுத்து சில வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதனை கட்டுப்படுத்தவே தற்போது அம்மாநிலத்தில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது.
மாணவர் சங்கம்
சில சமூக விரோதிகள் மூலம் வன்முறையை தூண்டும் வகையிலான கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர் சங்கத்தின் கோரிக்கை இவ்வாறு இருக்கையில், மாநில அரசு மணிப்பூர் (மலைப் பகுதிகள்) மாவட்ட கவுன்சில் 6 மற்றும் 7 வது திருத்த மசோதாக்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஆனால் இது மாணவர் சங்கத்தின் கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லையென சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை சங்கம் தீவிரப்படுத்தியுள்ளது.