வீல் சேருக்கு அடியில் துப்பாக்கி.. ஹாஸ்பிட்டலில் மாறுவேடத்தில் புகுந்த இஸ்ரேல் படை! அடுத்து பகீர்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடரும் நிலையில், மருத்துவமனை ஒன்றில் மாறுவேடத்தில் நுழைந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை நடத்திய தாக்குதல் குறித்த பகீர் வீடியோ இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக். 7ஆம் தேதி முதல் போர் நடந்து வருகிறது. முதலில் இஸ்ரேல் நாட்டில் புகுந்து ஹமாஸ் படை தீவிரமாகத் தாக்குதலை நடத்தியது. இதில் இஸ்ரேல் நாட்டில் பலர் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா பகுதியில் தீவிரமாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அங்குள்ள ஹமாஸ் படைகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
சீக்ரெட் பிளான்: காசாவில் இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் தொடரும் நிலையில், அங்கு இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலின் யுக்தி குறித்த வீடியோ இப்போது வெளிச்சத்திற்கு வெளிவந்துள்ளன. இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் இந்த அதிரடி சீக்ரெட் பிளானை நடத்தியுள்ளனர்.
அந்த இஸ்ரேல் வீரர்கள் மருத்துவ பணியாளர்களைப் போலவும் நோயாளிகளைப் போலவும் மாறு வேடமிட்டு, மேற்குக் கரைப் பகுதியில் உள்ள மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளனர். பிறகு சில நொடிகளில் அதிரடியாகத் துப்பாக்கியை எடுத்த அவர்கள் அங்கே ரூம் ரூமாக சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கே பதுங்கி இருந்த 3 ஹமாஸ் பயங்கரவாதிகளை அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்
என்ன நடந்தது: இந்த அதிரடி தாக்குதல் போது ஹமாஸ் பயங்கரவாதிகள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் அப்போது உள்ளே புகுந்த இஸ்ரேல் வீரர்கள் அவர்களைச் சுட்டுக் கொன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேற்குக்கரை நகரமான ஜெனினில் உள்ள இபின் சினா என்ற மருத்துவமனையில் இன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனைக்குள் புகுந்த இஸ்ரேல் வீரர்கள் திடீரென நடத்திய தாக்குதல்களின் சிசிடிவி காட்சிகள் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஹிஜாப் அணிந்த பெண்களை போல் மாறு வேடமிட்டுள்ள ஆயுதமேந்திய இஸ்ரேல் ராணுவ கமாண்டோக்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து மூன்று ஹமாஸ் வீரர்களைத் தேடித் திரிவது அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அவர்களில் சிலர் மருத்துவர்கள் போலவும் சிலர் நர்ஸ் போலவும் வேடமிட்டுள்ளனர். குறிப்பாக ஒருவர் ஒரு கையில் துப்பாக்கியையும், மற்றொரு கையில் வீல் சேரும் எடுத்து வருவது அதில் தெரிகிறது.
இஸ்ரேல் பாதுகாப்பு படை: இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த முகமது ஜலம்னே என்பவரைக் குறிவைத்தே இந்த ஆப்ரேஷன் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் இவர் முக்கிய நபராக இருந்தார் என்றும் இதன் காரணமாகவே அவரை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் சம்பவத்தை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரும் பாராட்டியுள்ளார். இஸ்ரேல் ராணுவத்தின் செயல்பாடுகள் வீரத்தைப் பறைசாற்றும் வகையில் இருப்பதாக அவர் பாராட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் ஹமாஸ் வீரர்கள் உயிரிழந்துள்ளதை அந்த அமைப்பும் உறுதி செய்துள்ளது. இதில் உயிரிழந்தோர் படங்களையும் ஹமாஸ் படை பகிர்ந்துள்ளது.
மருத்துவமனைகளில் தாக்குதல்களை நடத்தக் கூடாது என்று போர் விதி இருக்கும் போது அதைத் துளியும் கண்டுகொள்ளாமல் இஸ்ரேல் இப்படியொரு தாக்குதலை நடத்தியுள்ளதாக இணையத்தில் ஒரு தரப்பினர் சாடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications