கிட்டதட்ட அழிந்த மனித இனம்! உலகெங்கும் வெறும் 1200 பேர் தான் தப்பினர்.. மீண்டும் பேரழிவு நடக்குமா?
கரோலினா: இன்று உலகெங்கும் ஆதிக்கம் செலுத்தி வரும் மனிதர்கள் ஒரு காலகட்டத்தில் கிட்டதட்ட அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா! ஆனால் அதுதான் உண்மை. அப்போது உலகம் முழுக்கவே வெறும் ஆயிரம் பேர் தான் இருந்தனராம். அந்த நிலைக்கு மனிதர்கள் போக என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மனித இனம் பூமியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறது. இப்போது உலகெங்கும் மனித இனமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மருத்துவம், அறிவியல், தொழில்நுட்பம் என எல்லா துறைகளிலும் புதிய புதிய சாதனைகளை நாம் படைத்து வருகிறோம். ஆனால், மனித இனம் எப்போதும் இதுபோல இருந்தது இல்லை.

அழியும் நிலைக்குத் தள்ளப்பட்ட மனித இனம்
ஒரு காலகட்டத்தில் மனித இனம் அழிவின் விளிம்பிற்கே சென்றது. அப்போது உலகெங்கும் உள்ள மனிதர்கள் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 98% பேர் உயிரிழந்துவிட்டனராம். அப்போது என்ன நடந்தது.. அந்த நிலையில் இருந்து மனித இனம் மீண்ட வந்தது எப்படி என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வெறும் 1200 பேர்
சுமார் 9 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிலை ஏற்பட்டது. அப்போது மனிதர்கள் கிட்டதட்ட அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். உலக மக்கள் தொகை வெறும் 1,280ஆக சரிந்துள்ளது. கொஞ்சம் விட்டிருந்தாலும் மனித இனமே மொத்தமாக அழிந்திருக்கும். ஆனால், இதே அபாயகரமான நிலை தான் சுமார் 1.17 லட்சம் ஆண்டுகள் நீடித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சைன்ஸ் இதழில் இது குறித்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. சீனா, இத்தாலி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்களின் கம்ப்யூட்டர் மாடலை அடிப்படையாக வைத்து இது அமைந்துள்ளது. ஹோமோ சேபியன்ஸ் எனப்படும் நவீன மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பு ஆப்பிரிக்காவில் இருந்த மனித மூதாதையர்கள் அழிவின் விளிம்பிற்குச் சென்றது தெரிய வந்துள்ளது.
98% அழிந்து போனார்கள்!
இந்த ஆய்வில் இப்போது உலகெங்கும் உள்ள சுமார் 3,154 மனிதர்களின் மரபணுக்களைச் சேகரித்து அதைப் பகுப்பாய்வு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் கம்ப்யூட்டர் மாடல் மரபணு தகவல்களைப் பகுப்பாய்வு செய்துள்ளது. அதில் ஒரு கட்டத்தில் உலகில் இருந்த சுமார் 98.7 சதவீத மனித மூதாதையர்கள் அழிந்தது தெரியவந்தது. இது நவீன மனிதர்கள் மற்றும் நியண்டர்தால்களின் பொதுவான மூதாதையராக ஒரு புதிய ஹோமினின் இனத்தின் தோற்றத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
காரணம் என்ன
மக்கள் தொகை நல்ல நிலையில் இருந்த போது திடீரென அது சரிய என்ன காரணம் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட திடீர் காலநிலை மாற்றம் இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. நடு பிளீஸ்டோசீன் காலகட்டத்தில் ஆப்பிரிக்கக் கண்டனம் மிகவும் குளிராகவும், வறண்டதாகவும் மாறியது. பனிக் காலம் அதிக காலம் நீடித்தது. குளிரும் அதிகமாக இருந்தது. வெப்பநிலை குறைந்து வறண்ட காலநிலை உருவானது. இதுவே மக்கள் தொகை சரியப் பிரதான காரணமாகக் கருதப்படுகிறது.
இது குறித்து தலைமை ஆய்வாளர் யி-ஹுவான் பான் கூறுகையில், "மனிதக் குலம் அழிவின் விளிம்பில் சென்றுள்ளது. எங்கள் கண்டுபிடிப்புகள் மனித பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய பக்கத்தைத் திறக்கிறது. இந்த நபர்கள் எங்கே வாழ்ந்தார்கள், பேரழிவு தரும் காலநிலை மாற்றங்களை இவர்கள் மட்டும் எப்படிச் சமாளித்தார்கள். இந்த நெருக்கடியான காலகட்டம் தான் மனித மூளையின் பரிணாம வளர்ச்சியை வேகப்படுத்தியதா எனப் பல கேள்விகளை இது எழுப்புகிறது" என்றார்.
மீண்டு வந்த மனித இனம்
அந்த கடுமையான காலத்தைச் சமாளித்த பிறகே மக்கள் தொகை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன் பிறகும் சில சமயம் பேரழிவு ஏற்படும் அளவுக்கு இயற்கை பேரிடர் ஏற்பட்டாலும் அது இந்தளவுக்கு மோசமானதாகப் போகவில்லை. அதன் பிறகு மனித இனம் அறிவியலில் வளர வளர இயற்கை பேரிடர்களை எளிதாகச் சமாளிக்கும் நிலையை நாம் அடைந்துவிட்டோம். இதன் காரணமாகவே ஒரு காலத்தில் அழியும் நிலையில் வெறும் 1280ஆகக் குறைந்த உலக மக்கள் தொகை இன்று 800 கோடியைத் தாண்டி இருக்கிறது.












Click it and Unblock the Notifications