நாம தனியா இல்லை.. உயிர்கள் வாழ வாய்ப்பு இருக்கும் கிரகம்! கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும்தான் உயிர்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர். இந்நிலையில் உயிர்கள் வாழ வாய்ப்பு இருப்பதாக அறியப்படும் புதிய கிரகத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
K2-18b என பெயரிடப்பட்டிருக்கும் இந்த கிரகம் நமது பூமியிலிருந்து சுமார் 124 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது.

ஒளி ஒரு விநாடிக்கு ஏறத்தாழ 3 லட்சம் கி.மீ பயணிக்கும். அப்படியெனில் 124 ஆண்டுகளுக்கு ஒளி எவ்வளவு தூரம் பயணிக்கிறதோ அந்த தொலைவில் இந்த கிரகம் இருக்கிறது. மனிதன் இதுவரை பயணித்த வேகத்திலேயே மிக அதிகமான வேகம் 40,000 கி.மீ. அபோல்லோ விண்கலம்தான் இந்த வேகத்தை எட்டியிருக்கிறது. இந்த ராக்கெட்டை வைத்துக்கொண்டு நாம் பயணித்தால் கூட K2-18bக்கு போக சுமார் 3.60 லட்சம் வருடங்கள் ஆகும்.
இவ்வளவு தொலைவில் உள்ள கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று எப்படி கண்டுபிடித்தார்கள்? என கேட்க தோன்றுகிறதா! ஜேம்ஸ் வெப் எனும் தொலை நோக்கியை வைத்துதான் இதனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த K2-18b கிரகம் 5.2 மடங்கு பருமனாகவும், 9 மடங்கு அதிக நிறை கொண்டதாக இருக்கிறது. இது ஹைட்ரஜன் வாயுவால் நிரம்பிய வளிமண்டலமுடையது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிரகம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 2015ம் ஆண்டு கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் 2019ம் ஆண்டு ஹப்புல் தொலைநோக்கி மூலம் கிரகத்தில் நீராவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 2023ம் ஆண்டு கார்பன் டைஆக்சைடு மற்றும் மீதேன் வாயுக்கள் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி கண்டுபிடித்தது. இந்த கிரகம் முழுக்க முழுக்க கடலால் சூழப்பட்டிருக்கும் கிரகமாக இருக்கலாம் என்றும் தெரிய வந்திருக்கிறது.
பூமியில் உள்ள பாக்டீரியாக்கள் உருவாக்கும் வேதியல் சேர்மங்கள் இந்த கிரகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வேதி சேர்மங்களை டிஎன்எஸ் சொல்வார்கள். இதை நம் உலகில் உள்ள பாக்டீரியாக்கள்தான் உருவாக்கும். அப்படியெனில் K2-18b கிரகத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதற்கு என்ன அர்த்தம்? அங்கும் உயிர்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இருப்பினும் இது பற்றி முழுமையாக ஆய்வு செய்த பின்னர்தான் உண்மை தெரிய வரும்.
எப்படி இருப்பினும் இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக இல்லை என்பதற்கு தற்போது மிக முக்கிய ஆதாரம் கிடைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications