இவரு வேற குறுக்கு மறுக்க.. என்ன சொல்லி போரை நிறுத்தினாராம் தெரியுமா? டிரம்ப் புது தகவல்
நியூயார்க்: இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையில் அமெரிக்கா தான் மத்தியஸ்தம் செய்தது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் மூன்றாம் நாட்டின் தலையீடு இல்லை என இந்தியா திட்டவட்டமாக மறுத்து இருந்தது. இந்த நிலையில் அணு ஆயுத யுத்தத்தை தான் நிறுத்திவிட்டதாக மீண்டும் கூறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில தினங்களாக நேரடியாக மோதல் ஏற்பட்ட நிலையில் கடந்த வாரம் செவ்வாய் கிழமையில் இருந்து பாகிஸ்தான் இந்தியா மீது அத்துமீறி ட்ரோன்கள், மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்தியா தரப்பிலும் கடும் பதிலடி கொடுக்கப்பட்டது.
இரவு நேரங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்த நிலையில், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் கடும் பதற்றம் நிலவியது.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இருநாட்டு அதிகாரிகளும் கூறினர். ஆனால் அதற்கு முன்னதாகவே இது நாடுகளும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்தியா போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக டொனால்ட் டிரம்ப் முன்னரே கூறியது எப்படி என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின.
இந்த நிலையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது டொனால்ட் டிரம்பின் பேச்சு. நேற்று அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் பிரச்சினையில் தீர்வினை எட்ட முடியுமா என்பது தொடர்பாக இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவேன். சிறப்பாக செயல்பட்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைமைக்கு கடவுள் அருள் புரியட்டும்" எனக் கூறியிருந்தார். அவரது பேச்சை பாகிஸ்தான் வரவேற்பதாகக் கூறியிருந்த நிலையில், இந்த விவகாரத்தில் மூன்றாம் நாட்டு தலையீட்டை இந்தியா ஏற்காது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது.
ஆனாலும், இந்தியா பகிஸ்தான் விவகாரத்தில் தான் தான் போரை நிறுத்தியது போல் மீண்டும் தம்பட்டம் அடித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," நான்தான் உடனடி போர் நிறுத்தத்திற்கு உதவினேன். எனக்குத் தெரிந்தவரை இந்தியா மற்றும் பாகிஸ்தானின் தலைமை அசைக்க முடியாததாகவும் சக்தி வாய்ந்ததாகவும் இருந்தது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையே இது நிரந்தர போர் நிறுத்தம் என்று தான் நினைக்கிறேன்.
இரண்டு நாடுகளுமே நிறைய அணு ஆயுதங்களை கொண்டுள்ளன. ஆனால் அணு ஆயுதப் போர் நிறுத்தியது நான் தான் என்பதை உங்களுக்குச் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அவர்கள் நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், உறுதி தங்களுக்கு இருக்கிறது என்ற நிலைபாட்டில் இருந்தார்கள். ஆனால் நாங்கள் நிறைய உதவினோம். வர்த்தகத்தில் உதவினோம்.
சண்டையை நிறுத்தினால் உங்களுடன் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம் என்று இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் சொன்னேன். போரை நிறுத்தாவிட்டால் நாங்கள் எந்த வர்த்தகத்தையும் செய்யப் போவதில்லை என்று சொன்னேன். உடனடியாக நாங்கள் போரை நிறுத்துவோம் என்று சொன்னார்கள். அதை அவர்கள் செய்துவிட்டார்கள். இந்தியாவுடன் பாகிஸ்தானுடன் நாங்கள் நிறைய வர்த்தகம் செய்யப் போகிறோம். தற்போது இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் பாகிஸ்தானுடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications