சிங்கப்பூரில் ட்ரம்ப்-கிம் வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பு! 'டெர்ரிஃபிக்' உறவு.. ட்ரம்ப் அறிவிப்பு
Recommended Video
சிங்கப்பூர்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங்க் உன் ஆகியோர் இன்று சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கீரியும், பாம்புமாக இருந்த ட்ரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் உடனான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை சிங்கப்பூரின் செந்தோசா தீவில் உள்ள நட்சத்திர விடுதியில் இந்திய நேரப்படி இன்று காலை துவங்கியுள்ளது.
முன்னதாக நட்சத்திர ஹோட்டலுக்கு வந்த ட்ரம்ப் முதலில், கிம்மை நோக்கி கை நீட்டினார். இதையடுத்து இரு தலைவர்களும் கை குலுக்கி கொண்டனர். சுமார் 10 வினாடிகள் கைலுக்கிய பிறகு சில வினாடிகள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டனர்.
இதன்பிறகு, இரு நாட்டு தேசிய கொடிகளின் பின்னணியில், புகைப்படத்திற்காக இரு தலைவர்களும் போஸ் கொடுத்தனர். "நைஸ் டூ மீட் யூ மிஸ்டர் அதிபர்" என கிம் தெரிவிக்க, தனது கட்டை விரலை உயர்த்தி காட்டி புன்முறுவல் செய்தார் ட்ரம்ப்.
ட்ரம்ப் கூறுகையில், "மிகவும் மகிழ்ச்சியானதருணம். நல்ல ஒரு விவாதத்தை மேற்கொள்ள உள்ளோம். அதில் வெற்றி பெறுவோம். இரு நாடுகள் இடையே மிக சிறப்பான (terrific) உறவு மலரப்போகிறது. இதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" என்றார் ட்ரம்ப். கிம் கூறுகையில், இங்கு வந்துள்ளது எளிதான விஷயமல்ல. பல தடைகளை தாண்டி சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்றார்.
#WATCH: US President Donald Trump and North Korean leader Kim Jong Un at #SingaporeSummit at Sentosa Island. pic.twitter.com/R1m745mpIE
— ANI (@ANI) June 12, 2018
40 நிமிட குறுகிய பேச்சுவார்த்தைக்கு பிறகு, நீண்ட நேர பேச்சுவார்த்தைக்காக இரு தலைவர்களும் மீண்டும் கூடினர். அப்போது நிருபர்கள் இந்த சந்திப்பு பற்றி கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த ட்ரம்ப் "மிக சிறப்பு, மிக சிறப்பு. அருமையான உறவு" என்று பதில் அளித்தார். கிம் புன்முறுவலுடன் நிருபர்கள் கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்த்தார்.