"பணியவே முடியாது" .. பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் டிரம்பின் மூக்கை உடைத்த ஈரான்.. இறங்கி வரும் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையேயான 2வது கட்ட பேச்சுவார்த்தையில் பிரச்சனை உள்ளது. இதனால், மீண்டும் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் 2ம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள்(நாளை) நல்ல செய்தி வரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் போர் நிறுத்தத்தை நீட்டித்துள்ளார். ஆனால் ஈரான் இறங்கி வர மறுத்து டிரம்ப் பொய் சொல்கிறார் என்று தெரிவித்துள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் தற்காலிகமாக 2 வாரம் காலம் நிறுத்தப்பட்டது. இந்த போர் நிறுத்த காலத்தில் ஈரானின் அணுஆயுத தயாரிப்பு முயற்சியை தடுக்கும் வகையில் அந்த நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. முதற்கட்டமாக பாகிஸ்தானில் வைத்து இருநாடுகளின் பிரதிநிதிகளும் பேசினர். ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை.

இதையடுத்து 2வது கட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க குழு பாகிஸ்தான் புறப்பட தயாராக உள்ளது. ஆனால் ஈரான் பேச்சுவார்த்தைக்கு மறுத்துள்ளது. இதற்கிடையே தான் ஈரான் மீதான போர் நிறுத்தம் நேற்று முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதற்குள் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வந்து ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் உடனடியாக குண்டுகள் வீசப்படும் என்று டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
மீண்டும் போர் நிறுத்தம் நீட்டிப்பு
ஆனால் தற்போது போர் நிறுத்தத்தை டிரம்ப் நீட்டிப்பு செய்துள்ளார். ஈரான் பேச்சுவார்த்தைக்கு வரும் என்ற நம்பிக்கையில் டிரம்ப் போர் நிறுத்தத்தை நீட்டிப்பு செய்துள்ளார். இதுபற்றி டிரம்ப், ''ஈரான் அரசு பிளவுகளை சந்தித்துள்ளது. இது எதிர்பாராத விஷயம் அல்ல.
இருப்பினும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோரின் கோரிக்கையின் பேரில், ஈரான் தங்கள் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்த ஒரு திட்டத்துடன் வரும் வரை அந்நாட்டின் மீதான எங்கள் தாக்குதலை நிறுத்தி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
நான் எங்கள் ராணுவத்தின் சார்பில் ஈரான் முற்றுகையை தொடரவும், பிற விஷயங்களுக்கும் தயாராக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். எனவே, அவர்களின் (ஈரானின்) திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை போர் நிறுத்தத்தை நீட்டிப்பேன்" என்றார்.
பணிய வைக்க முயற்சிக்கும் டிரம்ப்
டிரம்ப், எப்படியாவது ஈரானை தனது வழிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். இதனால் தான் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் உடனடியாக குண்டுகள் வீசப்படும் என்ற டிரம்ப் தற்போது பல்டி அடித்துள்ளார். இருப்பினும் கூட ஈரான், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை விரும்பவில்லை.
வெள்ளிக்கிழமைக்குள் நல்ல செய்தி
இதற்கிடையே தான் ஈரான்- அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அடுத்த 36 முதல் 72 மணிநேரத்தில் மீண்டும் பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம் என்று பாகிஸ்தான் நம்புகிறது. அதற்கான வேலைகளில் பாகிஸ்தான் முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில் தான் பாகிஸ்தானின் முயற்சி மற்றும் ஈரானுடனான 2வது கட்ட பேச்சுவார்த்தை பற்றி அதிபர் டொனால்ட் டிரம்பிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ''பேச்சுவார்த்தை சாத்தியம் தான். இன்றைக்குள் நல்ல செய்தி வரும் என எதிர்பார்க்கலாம்'' என கூறியுள்ளார். இதனால் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
டிரம்புக்கு பதிலடி கொடுத்த ஈரான்
ஆனால் டிரம்பின் கருத்தை ஈரான் மறுத்துள்ளது. இதுபற்றி ஈரானின் அரசு சார்பு தஸ்னிம் நியூஸ் செய்தி நிறுவனம், ''டிரம்ப் பொய் சொல்லகிறார். வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக ஈரான் எந்த முடிவையும் எடுக்கவில்லை'' என கூறியுள்ளது. இதன்மூலம் டிரம்பை மீண்டும் ஈரான் சீண்டி உள்ளது. இதனால் இருநாடுகள் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து உள்ளது.















Click it and Unblock the Notifications