அலறவிடும் "பேரழிவின் தூதுவன்!" 20 நாட்களில் தமிழகம் உட்பட பல இடங்களில் Doomsday மீன்! பதறும் மக்கள்
கான்பரா: கடந்த 20 நாட்களில் மட்டும் பேரழிவின் தூதுவனாகக் கருதப்படும் டூம்ஸ்டே மீன் நான்கு முறை கரைகளில் ஒதுங்கியுள்ளன. ஜப்பான் புராணங்களின்படி இது பேரழிவின் சின்னமாக இருக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்த மீன் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்வோரும் சரி, கடற்கரைக்கு அருகே இருப்போரும் சரி இந்த ஒரு மீனைத் தான் பார்த்துவிடவே கூடாது என நினைப்பார்கள். அதுதான் டூம்ஸ்டே மீன். இந்த டூம்ஸ்டே மீன் பேரழிவின் தூதுவனாகவே கருதப்படுகிறது. ஜப்பான் புராணங்களின்படி இயற்கை பேரழிவுகளின் அறிகுறியாக இந்த டூம்ஸ்டே மீன் இருக்கிறது.

டூம்ஸ்டே மீன்
பொதுவாகவே ஆழ்கடலில் வாழும் இந்த டூம்ஸ்டே மீன்களைப் பார்ப்பதே மிக மிக அரிது. ஆனால், கடந்த 20 நாட்களுக்குள் இந்த மீன் நான்கு முறை மேற்பரப்பில் வந்துள்ளது . இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளில் தலா ஒரு முறையும் நியூசிலாந்தில் இரு முறையும் இந்த மீன் காணப்பட்டுள்ளது. அடிக்கடி இந்த டூம்ஸ்டே மீன் மேலே வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் தமிழ்நாடு
முதலில் தமிழ்நாட்டில் தான் இந்த மீன் காணப்பட்டது. தமிழ்நாட்டில் மீனவர்கள் சுமார் 30 அடி (9 மீட்டர்) நீளம் கொண்ட ஒரு பெரிய மீனைக் கடந்த மே மாதம் இறுதியில் பிடித்தனர். அந்த மீனை வைத்துப் போட்டோ எடுக்கவே ஏழு பேர் தேவைப்பட்டனர். அப்போது தான் பெரும்பாலானோருக்கு இந்த மீன் குறித்துத் தெரியவே வந்தது. அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டானது.
தமிழ்நாட்டில் இந்த மீன் தென்பட்டபோதே பலரும் பயந்தனர். ஆனால், அதன் பிறகு ஜூன் 2ம் தேதி ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் சுமார் 3 மீட்டர் நீளமுள்ள டூம்ஸ்டே மீன் கரை ஒதுங்கியது. உள்ளூர்வாசி ஒருவர் இந்த போட்டோவை பகிர்ந்திருந்தார்..
20 நாட்களில் நான்கு மீன்கள்
அடுத்து நியூசிலாந்தில் ஒரே வாரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் டூம்ஸ்டே மீன்கள் காணப்பட்டன. ஒன்று டுனெடினுக்கு அருகிலுள்ள கடற்கரையில் காணப்பட்டது. மற்றொன்று கிறிஸ்ட்சர்ச்சிற்கு அருகிலுள்ள பேர்ட்லிங்ஸ் பிளாட் கடற்கரையில் தலை இல்லாமல் காணப்பட்டது. இப்படி வெறும் 20 நாட்களில் 4 டூம்ஸ்டே மீன்கள் வெளியே வந்துள்ளன. இந்த மீன் இப்படி அடிக்கடி வெளியே வருவது பேரழிவின் அறிகுறியாக இருக்கும் என்றே மக்கள் அஞ்சுகிறார்கள்.
ஏனென்றால் இதற்கு முன்பு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் 12 அடி நீளமுள்ள ஒரு டூம்ஸ்டே மீன் காணப்பட்டது. சில நாட்களில் லாஸ் ஏஞ்சல்ஸில் 4.4 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது அடுத்தடுத்து 4 மீன்கள் காணப்பட்டுள்ள நிலையில், இது பேரழிவைக் குறிக்குமோ என மக்கள் அஞ்சுகிறார்கள்.
விஞ்ஞானிகள் சொல்வது என்ன
அதேநேரம் ஆழ்கடலில் வாழும் டூம்ஸ்டே மீன்கள் வெளியே வருவது குறித்து கடல் விஞ்ஞானிகள் இதற்கு வேறு காரணங்களை முன்வைக்கின்றனர். அதாவது கடலுக்கு அடியில் ஏற்படும் நில அதிர்வுகள், வெப்பநிலை மாற்றம் போன்ற அசாதாரண கடல் நிகழ்வுகளே இந்த டூம்ஸ்டே மீன்கள் கரை ஒதுங்கக் காரணமாக இருப்பதாக என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
டூம்ஸ்டே மீன் என்றால் என்ன?
டூம்ஸ்டே மீன்கள் நீளமான, நாடா போன்ற உடல் அமைப்பைக் கொண்ட மீன்களாகும். இவை மிதமான மற்றும் வெப்பமண்டல கடல்களில் 200 முதல் 1,000 மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன. அவை 30 அடி (9 மீட்டர்) வரை வளரக்கூடியவை. மேலும், இந்த மீன்களின் எலும்புகளும் நீளமானவை. பொதுவாக இவை மனிதர்களுக்குத் தீங்கு விளைவிப்பதில்லை. பிளாங்க்டன் மற்றும் சிறிய மீன்கள் போன்ற சிறிய கடல் விலங்குகளை உணவாக உட்கொள்கின்றன.
ஜப்பான் புரணங்கள்
ஜப்பான் புராணங்களின்படி, டூம்ஸ்டே மீன் பூகம்பங்கள் அல்லது சுனாமி போன்ற நில பேரழிவுகளின் தூதுவனாக இருக்கிறது. அதேநேரம் இதற்கு அறிவியல்பூர்வமாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. ஆனாலும், இந்த மீன் வரும்போதெல்லாம் பேரழிவும் கூடவே வருவதால் தான் இந்த மீனைப் பார்த்தாலே மக்கள் அஞ்சுகிறார்கள்.












Click it and Unblock the Notifications