லெபனான்: ஈரான் தூதரகத்தில் வெடிகுண்டு தாக்குதல்: 23 பேர் பலி- 150 பேர் படுகாயம்
பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இயங்கி வரும் ஈரான் தூதரகம் அருகே இன்று நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி 23 பேர் பலியானார்கள். 140க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சிரியாவில் ஷியா பிரிவு அதிபர் ஆசாத்துக்கு எதிராக சன்னி முஸ்லிம் போராளிகள் சண்டையிட்டு வருகின்றனர். தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ள இந்த மோதலில், அதிபர் ஆசாத்துக்கு ஷியா நாடான ஈரான், ஆயுதம் மற்றும் நிதியுதவி அளித்து வருகிறது.
ஈரானின் இத்தகைய ஆதரவிற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வரு, சன்னி போராளிகள் லெபனானில் தெற்கு பகுதியில் கார் மற்றும் ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இன்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப்பகுதியில் ஷியா முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதியில், அமைந்துள்ள ஈரான் தூதரகம் அருகே, அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன.
இதில், 23 பேர் கொல்லப் பட்டனர், 140-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். குண்டு வெடித்ததால், ஈரான் தூதரக அலுவலகம், அதனைச் சுற்றி அமைந்த கட்டிடங்கள் மற்றும் சாலையில் நின்றிருந்த வாகனங்கள் ஆகியவை பலத்த சேதமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி முதலில் ஈரான் தூதரக கதவுகள் மீது மோதியதாகவும், அதனைத் தொடர்ந்து குண்டுகள் நிரப்பப்பட்ட கார் அந்த கட்டிடத்தின் மீது மோதியதாகவும் தூதரக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இன்னும், தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்காத நிலையில் போலீசார் குண்டுவெடிப்பு குறித்து திவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இன்னும் யாரேனும் பாதிக்கப் பட்டுள்ளார்களா என தேடுதல் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.