துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கம் நடத்திய வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி
துபாய்: துபாய் தோப்புத்துறை முஸ்லிம் சங்கத்தின் சார்பில் வருடாந்திர இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 3ம் தேதி ஷார்ஜா அபூஷகாராவில் உள்ள கிராண்ட் எக்செல்சியர் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சி துவக்கத்தை எம். ஜெ. அவுலியா முகம்மது முன்மொழிய, எம். இப்ராகிம் திருமறை வசனங்களை மொழிந்து நிகழ்ச்சியை துவக்கிட ஜே.பி. ஜமால் மெய்தீன் தொகுத்து வழங்கினார். சங்கத்தின் தலைவர் எம். ஜெ. அபுல் ஹசன் தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்திட, சங்கத்தின் செயலாளர் ஹெச். கே. நாசர் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அமீரக இஸ்லாமிய அழைப்பாளர் எம். நாசர் அலி கான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார். அவருக்கு நினைவுப் பரிசை எஸ். எம். யூசுப்ஷா வழங்கினார். சிறப்பு விருந்தினராக துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் பி. எஸ். எம். ஹபீபுல்லாஹ் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவருக்கு நினைவுப் பரிசை சங்கத்தின் தலைவர் வழங்கினார்.
ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், ஷார்ஜா சீமான் அமைப்பின் தலைவர் அப்துல் மாலிக், சகோதரத்துவப் பேரவை அமைப்பை சேர்ந்த தமிழக உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கோவையைச் சேர்ந்த நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
வழக்கறிஞர் நந்தகுமார் நோன்பிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அவர் நோன்பு இருப்பதால் உடலுக்கும், உள்ளத்துக்கும் புத்துணர்வு அளிக்கிறது என குறிப்பிட்டார்.
சங்கத்தின் மூத்த உறுப்பினரும் நிர்வாகியுமாய் செயலாற்றி பணி ஓய்வில் நிரந்தரமாய் தாயகம் சென்ற கே. எம். ஷாகுல் ஹமீது அவர்களை கௌரவித்து நினைவுப்பரிசை காப்பாளர் ஹெச். பசுல் ஹக் வழங்கினார். இ. ஹா. இஸ்மாயில் நன்றி கூற இஃப்தார் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் அமீரகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் 300க்கும் அதிகமான தோப்புத்துறை நபர்கள் மற்றும் குடும்பத்தினர்களும் கலந்து கொண்டு புனித ரமலானின் வாழ்த்துக்களையும், மகிழ்வையும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்