சூரியனில் மெகா வெடிப்பு.. சாட்டிலைட்கள், மின் கட்டமைப்பு, விமானங்களை காலி செய்யும் சூரிய புயல்
சியாட்டில்: பூமியின் வளிமண்டலத்தைப் பாதிக்கும் ஒரு சக்திவாய்ந்த புவி காந்தப்புயல் ஏற்பட்டுள்ளது. இந்தப் புயல் காரணமாகப் பூமியைச் சுற்றி வரும் சாட்டிலைட்கள் மற்றும் மின் கட்டமைப்பு அமைப்புகள் மிகுந்த எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு தீவிரமான சூரியப் புயலாகும். இந்தச் சூரியப் புயலின் செயல்பாடுகளை ஆய்வாளர்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.
இந்த சோலார் சிஸ்டத்தின் அடிப்படையே சூரியன் தான். அதில் இருந்து வெளிவரும் சூரிய கதிர்கள் தான் பூமியின் எல்லா உயிரினங்களின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கிறது. அந்த சூரியனில் தொடர்ச்சியாகப் பல்வேறு மாற்றங்கள் நடந்து வரும் நிலையில், அதை ஆய்வாளர்கள் தீவிரமாகக் கவனித்து வருகிறார்கள்.

சூரியப் புயல்கள்
குறிப்பாக அங்கு ஏற்படும் சூரியப் புயல்கள் பூமியைத் தாக்கும்போது அது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அப்படியொரு சூரியப் புயல் தான் இப்போது பூமியைத் தாக்கியுள்ளது. நவம்பர் 11ம் தேதி இரண்டு கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஒரு G4-வகுப்பு புவி காந்தப்புயல் வெடித்தது. இதனால் பூமியை நோக்கி எனர்ஜி துகள்கள் (energetic particles) வீசப்பட்டன. இது புளோரிடா, டெக்சாஸ் மற்றும் அலபாமா போன்ற தெற்குப் பகுதிகளில் கூட ஒளிரும் அரோராக்களை உருவாக்கியது.
சக்திவாய்ந்தவை
சூரியனின் 4274 என்ற சூரியப் புள்ளியில் இருந்து ஒரு மிக பெரிய சூரிய ஒளிக்கற்றை (solar flare) வெடித்தபோது, இந்தச் சூரிய செயல்பாடு உச்சக்கட்டத்தை எட்டியது. இந்த ஒளிக்கற்றை, அதிக ஆற்றல் கொண்ட புரோட்டான்களை பூமியை நோக்கி அனுப்பியது. இவற்றில் சில மிகவும் சக்திவாய்ந்தவை, அவை வளிமண்டலத்திற்குள் ஊடுருவின.
இது தொடர்பாகப் பேராசிரியர் கிளைவ் டயர் கூறுகையில், "இது ஒரு மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு.. காஸ்மிக் கதிர்வீச்சு திடீரென அதிகரித்துள்ளது. இதை உலகம் முழுவதும் உள்ள நியூட்ரான் மானிட்டர்கள் பதிவு செய்துள்ளன. இது கிரவுண்ட் லெவல் நிகழ்வு (GLE) என்று அழைக்கப்படுகிறது" என்றார்.
தீவிர பாதிப்புகள்
இதுபோன்ற சோலார் புயல்கள் ரொம்பவே அரிதானவை.. ஒரு சூரிய சுழற்சியில் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே ஏற்படுமாம். பேராசிரியர் டயர், கடந்த 2006ம் ஆண்டு ஏற்பட்ட சோலார் புயலுடன் இதை ஒப்பிடுகிறார். 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இதுபோன்ற சூரிய புயல்கள் தாக்குமாம். 2006ல் அந்தச் சூரியப் புயல் தாக்கியபோது சில விமானங்களில் பயணித்தோர் சற்று அதிகக் கதிர்வீச்சு எதிர்கொண்டனர்.. வழக்கமானதைக் காட்டிலும் 20% வரை கதிர்வீச்சு அதிகரித்திருந்தது.
கடுமையான புவி காந்தப்புயல்கள் ஏற்படும்போது அவை வானொலி அமைப்புகள், செயற்கைக்கோள் GPS அமைப்புகள், வடக்கு மற்றும் தெற்கு துருவங்களின் அருகே உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டையும் பாதிக்கக்கூடும். மேலும், இந்தச் சூரியப் புயல்கள் மிகவும் தீவிரமானதாக இருக்கும்போது, அவை மின் கட்டமைப்பையும் கூட பாதிக்கும். அதுபோன்ற சூழல்களில் மிக பெரிய மின்தடையும் கூட ஏற்படும்.
கடந்த காலச் சூரியப் புயல்கள்
கடந்த காலங்களில் இதுபோன்ற சூரியப் புயல்கள் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.. 1859இல் கார்ரிங்டன் தந்தி சிஸ்டம் சூரிய புயலால் முற்றிலும் அழிந்துபோனது. மேலும் 1972ஆம் ஆண்டு சூரியப் புயலால் வியட்நாம் கடற்கரையில் இருந்த அமெரிக்கக் கடல் சுரங்கங்கள் வெடித்துச் சிதறியது. இதனால் தற்போது ஏற்பட்டுள்ள சூரியப் புயலையும் ஆய்வாளர்கள் உற்றுக் கவனித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications