துருக்கி, சிரியாவில் தொடரும் துயரம்! கட்டிட குவியல்களை தோண்ட தோண்ட சடலங்கள்..21,000-ஐ தாண்டிய பலி
நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியா ஆகிய இருநாடுகளிலும் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வாஷிங்டன்: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகளும் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

துருக்கியின் தென்கிழக்கே சிரிய எல்லையை ஒட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் தேதி அதிகாலை துருக்கியை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து பலமுறை பின் அதிர்வுகளும் ஏற்பட்டு துருக்கி மற்றும் சிரியாவை அதிரவைத்தது. அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளில் நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
பல அடுக்குமாடிகளைக் கொண்டு வானுயர நிமிர்ந்து நின்ற கட்டிடங்கள் சில வினாடிகளில் விழுந்து தரைமட்டம் ஆனது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். கட்டிட குவியல்களை தோண்ட தோண்ட சடலங்களாக மீட்கப்பட்டு வருவது பெரும் துயரமாக உள்ளது. துருக்கியில் மட்டுமே 10 மாகாணங்களை உலுக்கிய நிலநடுக்கத்தால் திரும்பிய பக்கம் எல்லாம் மரண ஓலங்களும், கண்ணீரை வரவழைக்கும் சோகங்களுமாக உள்ளது.
கட்டிட இடிபாடுகளை நீக்கி, அங்கே சிக்கியிருக்கும் மக்களை மீட்கவும், சடலங்களை அகற்றவும் பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டிட இடிபாடுகளை அகற்ற அகற்ற உயிரிழந்தவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளிலும் பெரும் அழிவை ஏற்படுத்திய இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 21 ஆயிரத்தை கடந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications