குரேஷியாவை உருக்குலைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 140 ஆண்டுகளுக்குப் பின் பேரழிவு
பெட்ரீனியா: குரேஷியாவில் 140 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெட்ரீனியா எனும் நகரையே உருக்குலைத்துப் போட்டுள்ளது. இனி மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெட்ரீனா என அந்நாட்டு பிரதமர் பிரகடனப்படுத்தியுள்ளார்.
குரேஷியாவின் தலைநகர் ஜாக்ரெப் அருகே 1880-ம் ஆண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் பல ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.

இதனைத் தொடர்ந்து தற்போது குரேஷியாவில் அதேபோல் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கி உள்ளது. இது ரிக்டரில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெட்ரீனியா நகரம்தான் பேரழிவை எதிர்கொண்டுள்ளது.

இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இனி பெட்ரீனியாவில் மனிதர்கள் வாழ முடியாது என்கிறார் அந்த நாட்டின் பிரதமர். 1991-95-ம் ஆண்டுகளில் யூகோஸ்லேவியா யுத்த காலத்தில் அதிகம் பாதிப்புக்குள்ளானதும் இந்த பெட்ரீனியா நகரம்தான்.

இந்த நிலநடுக்கத்தால் ஸ்லோவேனியாவின் அணு உலை தானாக செயல்பாட்டை நிறுத்தி உள்ளது. பெட்ரீனியா நகரில் மீட்பு பணிக்கு உதவ பல்வேறு நாடுகளும் முன்வந்துள்ளன.












Click it and Unblock the Notifications