வனுவாட் தீவை அதிர வைத்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பரபரப்பு!
வனுவாட்: தெற்கு பசிபிக் தீவு நாடான வனுவாட்டுவில் இன்று 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு தெற்கில் உள்ள நாடான வனுவாட்டில் இன்று 48 கிலோமீட்டர் ஆழத்தில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இசாஞ்சல் நகரத்திலிருந்து 123 கிலோமீட்டர் தெற்கிலும், வனுவாட் தலைநகர் போர்ட் விலாவிலிருந்து 338 கிலோமீட்டர் தொலைவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், "இந்த நிலநடுக்கத்தின் அபாயகரமான அலைகள் காரணமாக வனுவாட் மற்றும் நியூ கலிடோனியா கடற்கரைகளில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிலோமீட்டர்களுக்குள் சுனாமி ஏற்பட சாத்தியம் உள்ளது" என்று கூறியுள்ளது.
ரிக்டர் அளவில் 7.1 என பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல் ஏதும் இல்லை. USGS தொடக்கத்தில் 7.3 ரிக்டர் அளவு மற்றும் 35 கிலோமீட்டர் ஆழம் என்று அறிவித்தது. பின்னர், இந்த அறிவிப்பு திருத்தப்பட்டு ரிக்டர் அளவில் 7.1 நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 3 லட்சம் மக்கள் வசிக்கும் தாழ்வான தீவுக்கூட்டமான வனுவாட்டுவில் பூகம்பங்கள் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம். கடந்த நவம்பர் மாதம், 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வடக்கு வனுவாட்டுவை தாக்கியது. பூகம்பங்கள், புயல் சேதம், வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக வனுவாட்டு உலக இடர் அறிக்கையின்படி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications