கம்போடியாவில் கொளுத்தும் வெயிலில் சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச் சென்ற யானை மரணம்
அங்கோர்: கம்போடியாவில் கொளுத்தும் வெயிலில் 40 நிமிடங்களாக சுற்றுலாப் பயணிகளை சுமந்து சென்ற யானை சம்போ பரிதாபமாக உயிர் இழந்தது.
கம்போடியாவின் சீம் ரீப் மாகாணத்தில் உள்ளது உலக புகழ் பெற்ற அங்கோர் வாட் கோவில். அந்த கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யானை சவாரி செய்வது வழக்கம். யானை சம்போ கடந்த 2001ம் ஆண்டு முதல் சுற்றுலாப் பயணிகளை சுமந்து வந்தது.

கம்போடியாவில் தற்போது வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெயிலின் அளவு 40 டிகிரி செல்சியஸாக இருந்தது. இந்நிலையில் சம்போசுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு பங்கேங் மலை அருகே சென்றது.
கொளுத்தும் வெயிலில் 40 நிமிடங்களாக சுற்றுலாப் பயணிகளை சுமந்து சென்ற சம்போ திடீர் என தரையில் விழுந்து உயிர் இழந்தது. இது குறித்து சம்போவின் உரிமையாளரான அங்கோர் யானை நிறுவன மேனேஜர் ஓன் கிரி கூறுகையில்,
சம்போவின் மரணத்தால் கவலை அடைந்துள்ளோம். வெயில் மற்றும் போதிய காற்று இல்லாமல் சம்போ மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது என்றார்.
சம்போவின் மரணத்தை அடுத்து அங்கோர் வாட்டில் யானை சவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications