இ மெயிலின் வயது 32: இ மெயிலைக் கண்டுபிடித்தவர் தமிழர் என்பது தெரியுமா உங்களுக்கு?
நியூயார்க்: இப்போது நாம் "வாழ்ந்து" கொண்டிருக்கிற இமெயில் 32 வயதைத் தொட்டுள்ளது. 10 வயது பையன் முதல் 100 வயது தாத்தா வரை இன்று இமெயிலில் புழங்காத மனிதர்களே இல்லை என்ற இந்த இன்றைய நிலையை 32 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கிய காரணகர்த்தா ஒரு தமிழர் - வி.ஏ. சிவா அய்யாத்துரை.
இவர்தான் முதல் முதலில் எலக்ட்ரானிக் மெயில் எனப்படும் இமெயிலை உருவாக்கி உலகுக்கு அறிமுகப்படுத்தியவர். முறைப்படி தனது கண்டுபிடிப்புக்கு காப்பிரைட் அதாவது காப்புரிமையும் பெற்றவர்.
பள்ளி மாணவராக...
பள்ளிப் பருவத்திலேயே அய்யாத்துரை இமெயிலைப் பயன்படுத்த ஆரம்பித்து விட்டாராம். ஆனால் 1981 ம் ஆண்டு முதல்தான் இதை வெளியுலகுக்கு அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இமெயிலின் தோற்றம்...
சிவா அய்யாத்துரை தமிழராக இருந்தபோதிலும், பல காலத்திற்கு முன்பே அமெரிக்காவில் போய் செட்டிலானவர். 1978ம் ஆண்டு அவர் மேல்நிலைப்பள்ளி மாணவராக இருந்தபோது இமெயிலை கண்டுபிடித்து பயன்படுத்த ஆரம்பித்தார்.
இன்டர் ஆபிஸ் மெயில் சிஸ்டம்....
அவர் கண்டுபிடித்த மெயிலுக்கு வைத்த பெயர் இன்டர்ஆபீஸ் மெயில் சிஸ்டம். அதுதான் இமெயிலின் பிறப்பாக அமைந்தது.
விருதும், பாராட்டும்...
1981ம் ஆண்டு இந்த இமெயிலை வெளியுலகுக்கு அவர் அறிமுகப்படுத்தினார். இதற்காக அவருக்கு வெஸ்டிங்ஹவுஸ் அறிவியல் திறன் விருதும் கிடைத்தது. அதன் பின்னர் 1982ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி இந்த இமெயில் கண்டுபிடிப்பை அங்கீகரித்த அமெரிக்க அரசு அவருக்குப் பாராட்டும் தெரிவித்தது.
ஒப்படைப்பு...
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள லிவிங்ஸ்டன் உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் தனது சொந்த உபயோகத்திற்காக இந்த மின்னணு மெயில் முறையை உருவாக்கினார் அய்யாத்துரை. பின்னர் அதை நியூஜெர்சி, மருத்துவ பல்கலைக்கழகத்திற்கும் சொல்லிக் கொடுத்து அவர்களிடம் அதை ஒப்படைத்தார்.
பேடன்ட் மட்டும்...
அய்யாத்துரை இமெயிலைக் கண்டுபிடித்த சமயத்தில் சாப்ட்வேர் பொருட்களை காப்புரிமை பெற சட்டத்தில் இடம் இல்லாத நிலை இருந்தது. வெறும் பேடன்ட் மட்டுமே அப்போது நடைமுறையில் இருந்தது.
இமெயிலின் தந்தை...
இமெயிலை முதன் முதலில் உருவாக்கியவர் ய்யாத்துரைதான் என்றாலும் கூட மேலும் சிலர் தாங்கள்தான் இமெயிலை கண்டுபிடித்ததாக பின்னாளில் உரிமை கோரவே சர்ச்சைகளும் கிளம்பின. ஆனாலும் அய்யாத்துரைதான் இமெயிலின் தந்தை என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழரின் உழைப்பு...
இன்றைய இமெயில் காலத்தில் நாம் அனுப்பும் ஒவ்வொரு இமெயிலிலும் அய்யாத்துரையின் உழைப்பு அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.