மீசையில் மண் ஒட்டாத கதை! துருக்கிக்கு குறையாத திமிர்.. எகிறி அடிக்க காத்திருக்கும் இந்தியா
டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவளித்திருந்தது. இந்த ஆதரவுக்கு இந்தியாவிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்திருந்தது. இருப்பினும் தற்போது மீண்டும் பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்து துருக்கி பேசியிருக்கிறது.
பாகிஸ்தான் இந்தியாவை தாக்க துருக்கி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த விவகாரத்தில் இந்தியாவிலிருந்து துருக்கிக்கு கண்டனங்கள் பறந்தன.

இப்படி இருக்கையில் இன்று தனது x தளத்தில், "சகோதர நாடான பாகிஸ்தானுக்கு மீண்டும் எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன். சவாலான நேரங்களிலும் நாங்கள் உங்கள் பக்கம் இருப்போம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று எர்டோகன் கூறியுள்ளார். முன்னதாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்திருந்ததற்காக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நன்றி தெரிவித்திருந்தார். இதற்கான ரிப்ளைதான் மேற்குறிப்பிட்ட செய்தி.
"எங்கள் நாட்டுடனான அன்பு சகோதரர் எர்டோகனின் வலுவான ஆதரவும் அசைக்க முடியாத ஒற்றுமையும் என் மனதை தொட்டிருக்கிறது. துருக்கி உடனான உறவில் நாங்கள் பெறுமை கொள்கிறோம். இந்த உறவு ஒவ்வொரு சவாலிலும் வலுவடைகிறது. தெற்காசியாவில் அமைதியை வளர்ப்பதில் துருக்கியின் பங்கு அளப்பறியது. இந்த உறவுக்காக நாங்கள் நன்றியுள்ளவனாக இருக்கிறோம். இரு மக்களுக்கு பிரகாசமான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
இந்த செயல்பாட்டின்போது துருக்கி-பாகிஸ்தான் இடையேயான உறவு மேலும் வலுவடையட்டும், செழிக்கட்டும். தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்" என்று ஷெபாஸ் ஷெரீப் பதிவிட்டிருந்தார்.
இது தவிர மானே, தேனே, பொன்மானே போன்ற கதைகளும் இவர்கள் x பதிவில் பகிர்ந்திருக்கின்றனர். விஷயம் இது கிடையாது. துருக்கி சர்வதேச அளவில் நடுநிலைத்தன்மையுடன் செயல்பட வேண்டிய நாடு. ஆனால் அது தீவிரவாதத்தையும், தீவிரவாத தாக்குதல்களையும் ஆதரித்து வரும் பாகிஸ்தானுக்கு எப்படி தனது ஆதரவை தெரிவிக்க முடியும் என்பதுதான் கேள்வி. பஹல்காம் தாக்குதலை எதிர்த்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் எனும் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.
நியாயமான ஆளாக இருந்தால் என்ன சொல்லியிருக்க வேண்டும்? காஷ்மீரில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்களே! அவர்களுக்கு நீதி கேட்டு இந்தியா நடத்தும் ஆபரேஷனுக்கும், இதர நடவடிக்கைகளுக்கும் பாகிஸ்தான் ஒத்துழைப்பை கொடுக்க வேண்டும் என்றுதானே சொல்லியிருக்க வேண்டும். ஆனால் துருக்கி இந்தியாவை தாக்க ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு கொடுத்திருக்கிறது. ஆனால் இந்த ட்ரோன் தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது என்பது தனிக்கதை.
அதேபோல சிவசேனா யுபிடி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், வர்த்தக சங்கங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உட்பட பல முக்கிய நபர்கள் துருக்கி நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இப்படி அசிங்கப்பட்டிருந்தும், மீண்டும் பாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்து ட்வீட் செய்திருப்பது கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையின்றி வேறு என்ன?












Click it and Unblock the Notifications