ஐரோப்பிய யூனியனை விட்டு பிரிகிறது பிரிட்டன்.. இங்கிலாந்து மக்கள் அதிரடி 'தீர்ப்பு'!
லண்டன்: ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 54 % பேர் பிரிட்டன் வெளியேற வேண்டும் எனவும், 46 % பேர் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிலே நீடிக்க வேண்டும் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடாக நீடிக்கலாமா, வேண்டாமா என்பதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு பிரிட்டனில் வியாழக்கிழமை (ஜூன் 23) நடைபெற்றது.

28 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐரோப்பிய யூனியனில் பிரிட்டனும் அங்கம் வகிக்கிறது. இதற்கு எதிராக பிரிட்டனில் ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்த மக்களின் கருத்தை அறிவதற்கான பொதுவாக்கெடுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.
பிரெக்ஸிஸ்ட்' என அழைக்கப்படும் இந்த பொது வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக, இதுவரை இல்லாத அளவு 4.65 கோடி வாக்காளர்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். இதுகுறித்து பிரிட்டன் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐரோப்பிய யூனியனுடன் தொடர்ந்து இணந்திருப்பது குறித்து முடிவெடுப்பதற்கான பொது வாக்கெடுப்பில் பங்கேற்பதற்காக 46,499,537 பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்திருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு 2.30 மணி வரை நடந்த வாக்குப்பதிவு பெரும்பாலான இடங்களில் மழையின் காரணமாக பாதிக்கப்பட்டது. இருப்பினும் 4.6 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் 68 சதவீத வாக்குகள் பதிவாகின. இதையடுத்து பதிவான வாக்குகளின் ஓட்டு பெட்டிகள் 382 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தற்போது வாக்கு எண்ணும் பணி தொடங்கிய நிலையில் 39 மையங்களின் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் 54 சதவீதம் பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் எனவும், 46 சதவீதம் பேர் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனிலே நீடிக்க வேண்டும் எனவும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications