111வது கிறிஸ்துமஸை கொண்டாடும் ஐரோப்பாவின் வயதான மனிதர் நஸர் சிங்
லண்டன்: ஐரோப்பாவின் வயதான மனிதரான பஞ்சாப்பில் பிறந்த நஸர் சிங் வரும் 25ம் தேதி 111வது கிறிஸ்துமஸை கொண்டாட உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தநவர் நஸர் சிங்(110). பஞ்சாபில் விவசாயம் செய்து வந்த அவர் 1965ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவர் வடக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டர்லேண்டில் தனது மகன் செயின் சிங்குடன்(61) வசித்து வருகிறார். நஸர் சிங் தான் ஐரோப்பாவிலேயே வயதான மனிதர்.
ஜப்பானைச் சேர்ந்த 111 வயதாகும் சகாரி மோமோய் மற்றும் யசுதாரோ கொய்தே ஆகியோர் தான் நஸர் சிங்கை விட மூத்தவர்கள் ஆவர். இந்நிலையில் நஸர் சிங் இந்த ஆண்டு 111வது கிறிஸ்துமஸை கொண்டாட உள்ளார்.
சிங் இரண்டு உலகப் போர்கள், டைட்டானிக் கடலில் மூழ்கியது, கலர் டிவி கண்டிப்பு, மனிதன் நிலாவுக்கு சென்றது ஆகிய காலங்களில் வாழ்ந்துள்ளார்.
இது குறித்து சிங் கூறுகையில்,
நான் மகிழ்ச்சியாக உள்ளேன். இன்னும் வலுவாகவும், தெம்பாகவும் உள்ளேன். உங்களுக்கு வேண்டிய நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனக்கு நல்ல குடும்பம் உள்ளது என்றார்.
107 வயது வரை தோட்ட வேலை பார்த்த சிங்கிற்கு இதுவரை அறுவை சிகிச்சை எதுவும் நடக்கவில்லை. அவருக்கு இந்த வயதிலும் நன்றாக காது கேட்கிறது. இருக்கும் ஒற்றைப் பல்லை காட்டி அழகாக சிரிக்கிறார்.
சிங்கின் மனைவி நரஜன் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு தனது 90வது வயதில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். சிங்கிற்கு 9 குழந்தைகள், 34 பேரப்பிள்ளைகள், 63 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர்.