இந்திய மாம்பழங்களைச் சுவைக்க ரெடி.. தடையை நீக்கி இறக்குமதிக்கு ஐரோப்பிய யூனியன் அனுமதி!
லண்டன்: இந்திய மாம்பழங்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடையை 28 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் இன்று நீக்கியது.
சுவையான பலவகை மாம்பழங்களுக்கு புகழ்பெற்ற இந்தியா ஆண்டுதோறும் 15 லட்சம் டன் மாம்பழங்களை உற்பத்தி செய்து வருகிறது.
சுமார் 60 முதல் 70 ஆயிரம் டன் மாம்பழங்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மாம்பழத்துக்கு தடை:
28 உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அல்போன்சா மாம்பழம் மற்றும் நான்கு காய்கனிகளை கடந்த வருடம் மே மாதம் முதல் தங்கள் நாட்டில் இறக்குமதி செய்ய தற்காலிக தடை விதித்தது. இதையடுத்து இந்தியா தரப்பில் தடையை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இந்தியாவில் ஆய்வு:
அதனையடுத்து ஐரோப்பிய யூனியனை சேர்ந்த உணவு மற்றும் கால்நடை அதிகாரிகள் குழு இந்தியா வந்து, அல்போன்சா மாம்பழம் உள்ளிட்ட காய்கனிகளை பதப்படுத்தும் தொழிற்சாலைகளையும், பேக்கிங் செய்யும் பகுதிகளையும் பார்வையிட்டனர்.
திருப்தியான அதிகாரிகள்:
அப்போது இந்திய அதிகாரிகள் அவர்களின் கேள்விகளுக்கு விரிவான விளக்கம் அளித்தனர். இதில் அவர்களுக்கு திருப்தி ஏற்பட்டது.
தடை நீக்கம்:
இந்நிலையில் இன்று புரூசெல்ஸ் நகரில் கூடிய ஐரோப்பிய கமிஷன் குழுவின் கூட்டத்தில் இந்திய மாம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
பரிசீலினைக்குப் பின் முடிவு:
எனினும், காய்கறிகளை இறக்குமதி செய்வது தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதற்கு மேலும் சில ஆதாரங்களை பரிசீலித்த பின்னர் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
50 சதவீத காய்கனிகள்:
ஐரோப்பிய யூனியனுக்குத் தேவையான காய்கனிகளில் 50 சதவீதம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
விரைவில் நீங்கும்:
இந்திய காய்கனிகளுக்கு ஐரோப்பிய யூனியன் வரும் டிசம்பர் மாதம் வரை தடை விதித்திருந்த நிலையில், மாம்பழங்களுக்கு மட்டுமான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதால், இதர தடைகளும் விரைவில் நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.