நானாகத் தான் பொறுப்பிலிருந்து விலகினேன்... யாரும் கட்டாயப்படுத்தவில்லை: முன்னாள் போப்
உடல் நலக் கோளாறு காரணமாக போப்பாண்டவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந்தேதி அறிவித்தார் அப்போதைய போப் பெனடிக்ட். அதனைத் தொடர்ந்து அதே மாதம் 28-ந்தேதி அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. போப்பாண்டவர் பொறுப்பில் இருந்து விலகினார் பெனடிக்ட்.
ஆனால், பெனடிக்ட் கட்டாயத்தின் பேரில் பொறுப்பில் இருந்து விலகியதாக வாடிகனில் சர்ச்சை உண்டானது. ஆனால், அதற்கு பெனடிக்ட் பதில் எதுவும் தெரிவிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து அடுத்த போப்பாண்டவராக பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது தனது பதவி விலகல் குறித்து மௌனம் கலைத்துள்ளார் பெனடிக்ட். இது தொடர்பாக வாடிகன் செய்தி தொடர்பாளருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார் பெனடிக்ட். அதில் அவர், ‘தன்னை போப் ஆண்டவர் பெறுப்பில் இருந்து விலக யாரும் கட்டாயப்படுத்தவில்லை. அது தானாக சுதந்திரமாக எடுத்த முடிவு எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் பதவி விலகிய பின்பும் போப் ஆண்டவருக்கு உரிய வெள்ளை அங்கியையே அணிந்து வருவதற்குக் காரணம், ‘தனக்கு வேறு உடைகள் கிடைக்கவில்லை' என்பதே என அவர் தெளிவு படுத்தியுள்ளார்.