Exclusive: புதிய போன் நம்பர்களை கொடுத்த இந்திய தூதரகம்.. காலியாகும் உணவு பொருட்களின் ஸ்டாக்!
கிவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் தலைநகர் கிவ்வில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகுவதில் சிக்கல் இருப்பதாக அங்கு பயிலும் சென்னை மாணவர் கிரிதர் சோலாசா தெரிவித்து வந்த நிலையில் தற்போது புதிய போன் இணைப்பு எண்களை தூதரகம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பது குறித்து கடந்த சில தினங்களாகவே பதற்றம் நீடித்து வருகிறது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா பீரங்கி, அணு ஆயுதங்கள் உள்ளிட்டவைகளை சேகரித்து வைத்திருந்தது.
இதனால் பதற்றம் மேலும் அதிகரித்தது. உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அறிவித்திருந்தன.

உக்ரைன் மீது ரஷ்யா போர்
இந்த நிலையில் இன்று காலை உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிபர் புதின் ரஷ்ய படைகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி ரஷ்ய போர் தொடங்கியது. உக்ரைன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது. டோனிட்ஸ்க், லுகான்ஸ்க், ஒடேசா (Odesa), கார்கிவ் (Kharkiv) உள்ளிட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தப்படுகிறது.

உக்ரைனில் இருந்து சென்னை மாணவர்
இதுகுறித்து உக்ரைனில் மருத்துவம் படிக்கும் சென்னை மாணவர் கிரிதர் சோலோசா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், நான் உக்ரைனின் மேற்கு பகுதியான ஐரோப்பியா அருகே இருக்கிறேன். அதனால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் முக்கியமாக கிழக்கு பகுதிகள், ரஷ்யாவுக்கு வடக்கு பகுதிகள், தெற்கு பகுதிகளில்தான் இந்த தாக்குதல்கள் கடுமையாக இருக்கிறது.

கிழக்கு பகுதி
நாங்கள் கிழக்கு பகுதியில் உள்ள இந்திய மாணவர்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். ஆனால் லைன் கிடைக்கவில்லை. சிலர் வெடிகுண்டு சப்தம் அதிகமாக இருப்பதாக கூறுகிறார்கள். மேலும் கிவ்வில் உள்ள இந்திய தூதரகம் 3 எண்களை கொடுத்துள்ளது. அதற்கு முயற்சித்தால் லைன் கிடைக்கவில்லை. நிறைய பேர் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்வதால் அந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது போல் வங்கி இணையதளங்களில் சைபர் தாக்குதல் குறித்து கூறுகிறார்கள். அது இரு தினங்களுக்கு முன்பு இருந்தது. ஆனால் அதை உக்ரைன் அரசு சரி செய்துவிட்டது. எனினும் அவ்வப்போது வங்கி சர்வர்கள் இயங்காமல் போகின்றன.

இந்தியா திரும்ப முயற்சி
கிழக்கு பகுதியில் உள்ள இந்திய மாணவர்களுடன் பேசி அருகில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வர சொல்ல போகிறோம். அங்கிருந்து ஏதாவது ஒரு நாட்டுக்கு போய் அங்கிருந்து இந்தியா செல்ல அறிவுறுத்த திட்டமிட்டிருக்கிறோம். முதலில் ஜூனியர் மாணவர்களை பாதுகாப்பாக அனுப்பிவிட்டு பிறகு நாங்கள் வெளியேறி இந்தியா வருகை தரவுள்ளோம் என்றார்.
Recommended Video

புதிய எண்கள்
ஏற்கெனவே வழங்கப்பட்ட எண்கள் மூலம் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் தற்போது புதிய எண்களை தூதரக அதிகாரிகள் வழங்கியுள்ளனர். இதனால் எளிதில் தொடர்பு கொள்ள முடிவதாக அந்த மாணவர் மீண்டும் நம்மை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். மேலும் அங்குள்ள கடைகளில் மளிகை சாமான்களையும் உலர் உணவு பொருட்களையும் வாங்க குவிவதால் கடைகளில் இருப்புகள் தீர்ந்து வருவதாக உடன் படிக்கும் மாணவர்கள் தெரிவித்ததாக சென்னை மாணவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications