Exclusive: இந்தியாவை பார்த்தால் இலங்கை ஆட்சியாளர்களுக்கு பயம்.. ஏன் தெரியுமா?: இலங்கை பத்திரிகையாளர்
கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், இந்தியாவுக்கு எந்தளவுக்கு முக்கியம்? இது சர்வதேச அரசியலில் ஏற்படுத்த இருக்கும் தாக்கங்கள் என்ன? என்பது உள்ளிட்ட விஷயங்களை இலங்கையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் நிக்ஸனிடம் ஒன் இந்தியா நடத்திய சிறப்பு நேர்காணல் இங்கே..
கேள்வி: அதிபர் தேர்தலில் இருந்த நிலையே தொடர்கிறதா? அல்லது எதிர்க்கட்சிகள் கடுமையான போட்டியைக் கொடுக்கும் சூழல் இருக்கிறதா?

பத்திரிகையாளர் நிக்ஸன்: இலங்கையில் எதிர்க்கட்சிகள் பலமாக இருப்பதாகச் சொல்ல முடியாது. எதிர்க்கட்சிகளின் வரிசையில் இருக்கும் 3 கட்சிகளுமே பலமாக இல்லை. இவர்கள் கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தபோது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் பெரிதாகப் பேசப்பட்டது. விமர்சனங்களுக்குப் பயந்து கிட்டத்தட்ட 30 உறுப்பினர்கள் இந்த முறை மீண்டும் போட்டியிடவில்லை. எனவே, எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் வலுவாக இல்லை.
இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 113 தொகுதிகளில் வெல்ல வேண்டும். அறுதிப் பெரும்பான்மை பெற 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அனுர குமார திசநாயக்கவின் ஜேவிபி இந்த முறை அறுதிப் பெரும்பான்மை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரம்பரிய கட்சிகளின் மீதான மக்களின் கோபம், ஜேவிபி கட்சிக்கு ஆதரவாக திரும்பக்கூடும்.
கேள்வி: அனுர குமார திசநாயக்கவின் ஜேவிபி கட்சி, இந்திய எதிர்ப்பு மனநிலை கொண்ட கட்சி. ஆட்சிக்கு வந்தபிறகு இந்த மனநிலை மாறி இருக்கிறதா?
பத்திரிகையாளர் நிக்ஸன்: இலங்கையின் அரசியல் கட்டமைப்பு என்பது வித்தியாசமானது. அதில் ஊழல் மோசடி மலிந்துவிட்ட நிலையில், அனுர குமார திசநாயக்க தலைமையிலான அரசு அதை உடனடியாக மாற்ற முடியாது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
அரசு என்ற கட்டமைப்பிற்குள் வந்துவிட்டால் சில பண்பாடுகளை பின்பற்றியாக வேண்டும். இந்திய, அமெரிக்க அரசுகளை அனுசரித்துப் போக வேண்டி இருக்கிறது. சீனாவையும் பகைத்துக் கொள்ள முடியாது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்வற்றிற்கும் பொறுப்புச் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது. அரசு என்கிற கட்டமைப்புக்குள் வரும்போது சற்று இறங்கிப்போக வேண்டியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகான சூழலில் தான் இன்னும் தெளிவாகப் பார்க்க முடியும்.
கேள்வி: அமெரிக்காவில் டிரம்ப் அதிபர் தேர்தலில் வென்றிருக்கிறார். இலங்கையில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த இந்தியா, சீனா போன்ற நாடுகள் தொடர்ந்து முன்னகர்ந்து வருகின்றன. மாறி வரும் சர்வதேச சூழலில் இலங்கை தேர்தல் எந்தளவுக்கு முக்கியம்?
பத்திரிகையாளர் நிக்ஸன்: இலங்கை நிச்சயமாக இந்தியாவோடு அனுசரித்துப் போக வேண்டி இருக்கிறது. ஆனால், சிங்கள ஆட்சியாளர்கள், அது அனுர குமார திசநாயக்க, ரணில் விக்கிரமசிங்க, கோத்தபய ராஜபக்ச, சந்திரிகா, ஜெயவர்தனே என யாராக இருந்தாலும் இந்தியா என்றால் அவர்களுக்கு பயம். இந்தியா தமிழர்களுக்கு சாதகமான நாடு என்ற பயம் இன்று வரையில் இருக்கிறது.
சிங்கள ஆட்சியாளர்களின் உறவு என்பது சீனாவுடன் தான் இருக்கும். அது கலாச்சார ரீதியானதும் கூட. பவுத்த சமயம் என்ற வகையில் சீனாவுடன் கூடுதலான உறவைக் கொண்டிருக்கிறார்கள். இப்போது டிரம்பின் வருகையின் பின்னர், இந்தியா விவகாரத்தில் இலங்கை ஆட்சியாளர்கள் என்ன அணுகுமுறையை எடுக்கப் போகிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
இவ்வாறு பத்திரிகையாளர் நிக்ஸன் கூறியுள்ளார். நமது ஒன் இந்தியா செய்தியாளர் நடத்திய நேர்காணலை முழுமையாக இங்கே காணலாம்..
வரும் நவம்பர் 14-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. அனுர குமார திசநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி, சஜித பிரேமதாச, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் கட்சிகளும் களத்தில் உள்ளன.
இலங்கை நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டி பெற 113 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும். 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் சிறப்பு மெஜாரிட்டி கிடைக்கும். அதன் மூலம் அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவது போன்ற பெரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியும். எனவே, அனுர குமார திசாநாயக்கவின் ஜேவிபி கட்சிக்கு சிறப்பு மெஜாரிட்டி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications