தாயை பற்றி பேசியபோது கண்ணீர் சிந்திய மோடி.. பேஸ்புக் தலைமை அலுவலகமே நிசப்தமானது
சிலிக்கான்வேலி: பேஸ்புக் தலைமை அலுவலகம் சென்ற மோடி, டவுன்ஹாலில் சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பெற்றோர் குறித்து பேசிய மோடி குரல் தழுதழுத்தது. அவரது கண்களில் கண்ணீர் வடிந்தது.
டவுன்ஹாலில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது, பேஸ்புக் தலைவர் மார்க் ஜுகர்பர்க், மோடியிடம் அவரது பெற்றோரின் பங்களிப்பு குறித்து ஒரு கேள்வி கேட்டார்.

அப்போது மோடி கூறியதாவது: டீ விற்பனை செய்த நான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக வந்ததை நம்புவது என்பதே கடினமானது. இதற்காக 125 கோடி இந்தியர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
நான் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் இருந்துவந்தவன். எனது வளர்ச்சிக்காக எனது தாய் பல தியாகங்கள் செய்தார். ஒரு மனிதன் வாழ்க்கையில், பெற்றோரும், ஆசிரியர்களும் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவர்கள்.
ஒரு தாய் எப்போதுமே தனக்கு என்ன வேண்டும் என்று நினைத்து பார்க்க மாட்டார். தனது பிள்ளை எப்படி வர வேண்டும் என்பதைத்தான் நினைத்து பார்ப்பார்.

எனது பெற்றோர் கிடைத்தவேலையை செய்து என்னை வளர்த்தனர். எனது தாய் கல்வியறிவு இல்லாதவர். இன்று நான் இங்கு பேசுவதையும் டிவி மூலம் பார்த்து, பிறர் சொல்வதை வைத்துதான் அவரால் என்ன நடக்கிறது என்பதை, அறிந்துகொள்ள முடியும்.
பக்கத்து வீட்டுக்கு சென்றுதான் எனது தாய் சமையல் செய்து எங்களுக்கு சாப்பாடு கொண்டுவருவார். தண்ணீருக்காக நெடுந்தூரம் சென்று சேகரித்து வருவார். (இவ்வாறு மோடி பேசியபோது, அவரது நா தழுதழுத்தது. அவரது கண்களில் லேசான கண்ணீர் எட்டிப்பார்த்தது. வலிமையான பிரதமராக அறியப்படும், மோடி, தாயை பற்றி பேசியபோது முழுமையாக உடைந்துவிட்டார். அப்போது, டவுன்ஹாலில் குண்டூசி விழும் சத்தம் கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிலவியது)
இதன்பிறகு மோடி பேசுகையில், "மோடியின் பெற்ரோர் மட்டுமல்ல, இந்தியாவில் எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் கனவுகளை நிறைவேற்றுவதற்காக தங்கள் கனவுகளை தியாகம் செய்துள்ளனர்" என்றார்.
நிகழ்ச்சி முடியும்போது, பேஸ்புக் தலைவர் மார்க்கை பெற்றெடுத்ததற்காக அவரது பெற்றோர் பெருமைப்பட வேண்டும். அவருக்காக எழுந்து நின்று மரியாதை செலுத்துங்கள் என்று மோடி கேட்டுக்கொண்டார். எனவே கூட்டத்தார் எழுந்து நின்று மரியாதை அளித்தனர்.












Click it and Unblock the Notifications