ஃபெட்னா 2017: வட அமெரிக்க தமிழ்ப் பேரவை விழாவில்.. கிராமங்களின் கலையதிர்வு நாயகன் கலா.பினுகுமார்
வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழா வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அதில் சிறப்பு விருந்தினராக, கிராமங்களின் கலையதிர்வு நாயகன் கலா.பினுகுமார்
மினசோட்டா: வட அமெரிக்க தமிழ்சங்கமும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்தும் 30ம் பேரவைத் தமிழ் விழாவில் சிறப்பு விருந்தினராக, கிராமங்களின் கலையதிர்வு நாயகன் கலா.பினுகுமார் கலந்துகொண்டு தமிழர் நாடகக் கலை சிறப்பை காட்சிப்படுத்துகிறார்.
திரைப்படங்களுக்குள் நுழையத் தங்கள் உடல்மொழியைப் பதனப்படுத்த விரும்புபவர்களின் புகலிடமாக நவீன நாடக அரங்குகள் மாறிவிட்டசூழலில், குழந்தைகள் பயிற்சியில் கரைந்து கலையில் ஈடுபட முன்வருதலே ஆதிக்கம் நிறைந்த இந்தக் காலத்தில் முன்னுதாரணமற்ற பாலபாடமாகும்.
பொழுதுபோக்கிகளிடமிருந்து குழந்தைகளை காபந்து செய்வதற்கும் தற்காப்பதற்கும் அவர்களை மெய்யான கலைகளில் ஆர்வம் கொள்ளச் செய்வதுதான் வழி. அதுதான் அவர்களை உள்ளடக்கம் கொண்டவர்களாக மாற்றும்.
பொழுது போக்கிகளின் அசுர பலத்தை முறியடிக்கும். இத்தகைய முனைப்புக்குஅருந்தொண்டாற்றி வருபவர்தான், 'கிராமங்களின் கலையதிர்வு நாயகன்' முனைவர் கலா.பினுகுமார் அவர்கள்.
நிகழ்த்துகலையில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திடமிருந்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். முத்தமிழறிஞர் டாக்டர்கலைஞரின் 'ஓர் உளியின் ஓசை' எனும் படத்திலும் பங்களிப்புச் செய்திருக்கிறார்.
அது மட்டுமல்லாது, எரிதணல், கருஞ்சுழி, இராமானுஜர் போன்றபடங்களுக்கும் தொடர்களுக்கும் தன் பங்களிப்பைச் செய்திருக்கிறார். பல நாடகங்களை இயக்கியிருக்கிறார்.
மரபுக்கலைகளான கோலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டாம் போன்றவற்றை முறையாகக் கற்றுப் பயின்றவர். வள்ளி, எரிதணல், காலவாசிகள் போன்ற நாடகங்களுக்கும் இசையமைத்து இயற்றியிருக்கிறார்.
தெருக்கூத்து உள்ளிட்ட நிகழ்த்துகலைகளை அரங்கேற்றியும் மாணவர்களுக்குப் பயிற்றுவித்தும், கிராமங்களின் கலையதிர்வுகளை மங்காவண்ணம் காத்து வருகிறார். நாயகனின் மக்களிசையையும் கலையாட்டங்களையும் கண்டு பயிலவாருங்கள், அமெரிக்கத் தமிழ் விழாவுக்கு.