"டெவில்" நண்டை சாப்பிட்ட சோஷியல் மீடியா பிரபலம்.. சட்டென வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு! பரிதாபம்
மணிலா: வியூஸ்கள் அதிகம் பெறுவதற்காகச் சமூக வலைத்தளப் பிரபலம் ஒருவர் விஷம் உள்ள டெவில் நண்டைச் சாப்பிட்டுள்ளார். நன்றாகச் சமைத்துச் சாப்பிட்டபோதிலும், அந்த விஷம் அவரது உடலில் ஏறியுள்ளது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காலத்தில் சமூக வலைத்தளப் பிரபலங்கள் மக்கள் கவனத்தை ஈர்க்க ஏதேதோ செய்கிறார்கள். சில நேரம் அவர்கள் எல்லை மீறவும் கூடச் செய்கிறார்கள். இது அவர்களின் உயிரையே கூட பறிப்பதாகவும் அமைந்துவிடுகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த 51 வயதான பிலிப்பைன்ஸின் புட் யூடியூபர் எம்மா அமித் பரிதாபமாக உயிரிழந்தார். அவர் விஷத்தன்மை கொண்ட 'டெவில் நண்டு' ஒன்றைச் சாப்பிட்டுள்ளார். அதுவே அவரது உயிரைப் பறித்துள்ளது.
அதாவது கடந்த பிப்ரவரி 4ம் தேதி எம்மா அமித் தனது நண்பர்களுடன் பலவான் மாகாணத்தின் புவேர்ட்டோ பிரின்செசா அருகே உள்ள மாங்குரோவ் காட்டிற்குப் போய் உள்ளார். அங்கு தான் அவர் இந்த டெவில் நண்டைக் கண்டுபிடித்துள்ளார். அதை அப்படியே விட்டுவிடாமல் தேங்காய்ப் பாலில் சமைத்து, அதைச் சாப்பிடும் வீடியோவையும் எம்மா தனது டிக்டாக் மற்றும் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இதுவே அவரது உயிரைப் பறித்துள்ளது.
என்ன நடந்தது
நண்டைச் சாப்பிட்டு சில மணி நேரத்தில் கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. எம்மாவுக்கு வலிப்பு ஏற்பட்டதாகவும், சிறிது நேரத்திலேயே அவர் சுயநினைவை இழந்ததாகவும் கூறப்படுகிறது. மயங்கியவுடன் அவருடைய உதடுகளும் நீல நிறமாக மாறியுள்ளது. உடல்நிலை மோசமடையவே, உடனடியாக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த மருத்துவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். அவருக்குத் தீவிரச் சிகிச்சை தரப்பட்டுள்ளது. இருப்பினும், நண்டைச் சாப்பிட்டு இரண்டு நாட்களில் பிப்ரவரி 6ம் தேதி எம்மா உயிரிழந்தார்.
முதலில் அவருக்கு ஏன் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது என்பது யாருக்கும் புரியவில்லை. உள்ளூர் அதிகாரிகள் விசாரணையில், எம்மா வீட்டின் குப்பைத் தொட்டியில் தனித்துவமான, பிரகாசமான வண்ண டெவில் நண்டுகளின் ஓடுகளைக் கண்டெடுத்தனர்.
விஷ நண்டு
இது தொடர்பாக அந்தக் கிராமத் தலைவர் லேடி ஜெமாங் கூறுகையில், "எம்மாவுக்கு மீன்களைப் பற்றியும் கடன் உயிரினங்கள் பற்றியும் நன்றாகவே தெரியும். இது மிகவும் வருத்தமளிக்கிறது.. அவர் கடலோரத்தில் நீண்ட காலமாக வசித்து வருகிறார்.. எனவே இந்த அபாயகரமான டெவில் நண்டைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதையும் தாண்டி அவர் அன் அதைச் சாப்பிட்டார் என்பதுதான் குழப்பமாக இருக்கிறது.
ஆனால், இந்தச் சம்பவம் நமக்கு இன்னொரு எச்சரிக்கை. என்னவனாலும், இந்த வகை நண்டுகளைச் சாப்பிட வேண்டும். இருமடங்கு விழிப்புணர்வுடன் இருக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த அபாயகரமான டெவில் நண்டுகளை உண்ணாதீர்கள். இனியும் இதனால் உயிரிழப்புகள் ஏற்படக்கூடாது" என்றார்.
வியூஸ்களை பெற
எம்மா அமித் தனது சமூக வலைத்தளங்களில் வியூஸ்களை அதிகம் பெற இந்த நண்டைச் சாப்பிட்டு இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இதுபோல பிரகாசமான அல்லது டெவில் நண்டைச் சாப்பிட்டால் வியூஸ் வரும் என அவர் இதைச் செய்திருக்கலாம். நன்கு சமைத்தால் விஷயம் உடலில் ஏறாது என அவர் கருதியிருக்கலாம்!
டெவில் நண்டுகள், விஷத்தன்மை கொண்ட பவளப்பாறை நண்டுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் பவளப்பாறைகளில் வாழும் ஒருவகை நண்டு இனம் இதுவாகும். இவை பஃபர்மீன்களிலும் காணப்படும் சக்சிடாக்ஸின் (saxitoxin) மற்றும் டெட்ரோடாக்ஸின் (tetrodotoxin) போன்ற உயிருக்கு ஆபத்தான நரம்பு நச்சுக்களைக் கொண்டுள்ளன. இந்த நண்டுகள் "பார்க்க அழகாக இருக்கும்" ஆனால் சாப்பிட்டால் சில மணிநேரங்களில் உயிரைப் பறிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். டெவில் நண்டுகளின் நச்சு எவ்வளவு சூடு செய்து சமைத்தாலும் அழியாது. சில மணி நேரத்தில் நிச்சயம் உயிர் போகும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications