அமெரிக்காவில் வரலாற்று சாதனை.. 3 தமிழர்கள் உட்பட 5 இந்தியர்கள் எம்.பி.களாக பதவி ஏற்பு!
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 3 தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 5 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களாக 3 தமிழர்கள் உட்பட இந்திய வம்சாவளியைச்சேர்ந்த 5 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர். சென்னையை பூர்வீகமாக கொண்ட 3 தமிழர்கள் உட்பட 5 பேரும் ஜனநாயக கட்சியின் சார்பில் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்வாகி வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
அமெரிக்கவில் அதிபர் தேர்தலுடன், பாராளுமன்ற செனட் சபையின் 34 இடங்களுக்கும், பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும் கடந்த நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் கடும் போட்டி நிலவியது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்தியர்கள் 5 பேர் வெற்றி பெற்றனர். செனட் சபைக்கு கலிபோர்னியா மாகாணத்திலிருந்து தமிழ்ப்பெண் கமலா ஹாரீஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதிநிதிகள் சபைக்கு சென்னையில் பிறந்த பிரமிளா ஜெயபால் என்பவர் வாஷிங்டன் மாகாணத்தில் இருந்தும், சென்னையை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த ரோகன்னா என்பவர் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்தும் மற்றொரு இந்தியரான அமி பெரா, சிலிக்கான் வேலியில் இருந்தும் தேர்வாகினர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர்.
அமெரிக்க வாழ் இந்தியர்கள் 5 பேர் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டிருப்பது புதிய வரலாற்று சாதனை என கூறப்படுகிறது.