சவுதியில் மூன்று மர்ம மனிதர்களால் 5 பேர் சுட்டுக் கொலை- 9 பேர் படுகாயம்!
ரியாத்: சவுதி அரேபியாவில் 3 மர்ம மனிதர்களால் பொதுமக்களின் மேல் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் சன்னி பிரிவினரின் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அல் -ஆசா மாவட்டம், அல் தல்வா கிராமத்தில் சிறுபான்மை இனத்தவர்களான ஷியா பிரிவினர் அதிகம் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மொஹரம் பண்டிகை நாளில், அங்குள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு முகமூடி அணிந்து வந்த 3 மர்ம ஆசாமிகள், கண் இமைக்கும் நேரத்தில் பொதுமக்கள் மீது எந்திர துப்பாக்கிகளாலும், கைத்துப்பாக்கிகளாலும் சரமாரியாக சுட்டனர்.
இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், 9 பேர் படுகாயம் அடைந்ததாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. சம்பவ இடத்தை போலீசார் சுற்றி வளைத்து "சீல்" வைத்தனர்.
இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி, சவுதி அரேபியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்த தாக்குதல் தீவிரவாத தாக்குதல்தான் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.