பேஸ்புக் மோகம்... விமான என்ஜின் அருகே போட்டோ எடுத்த ஏர்ஹோஸ்டஸ் டிஸ்மிஸ்
சிகாகோ: அமெரிக்காவில் விமானத்தின் என்ஜினுக்குள் நின்றுகொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்த பணிப்பெண்ணை பணியிலிருந்து நீக்கி விமான நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
சமூகவலைதளங்களில் உடனுக்குடன் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும் வசதி இருப்பதால், பலர் தங்களை வித்தியாசமான கோணங்களில் புகைப்படங்களாக எடுத்து, அவற்றை தங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், அவை சில சமயம் ஆபத்தாகப் போய் விடுகிறது.
அந்தவகையில், வித்தியாசமாக புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டு தனது விமானப் பணிப்பெண் வேலையை இழந்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த எரிக்கா (41).
சம்பவத்தன்று அமெரிக்காவின் பரபரப்பான சிகாகோ விமான நிலையத்தில், விமானம் ஒன்று புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்தது. பயணிகள் ஒவ்வொருவராக விமானத்தில் ஏறிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த விமான பணிப்பெண்களில் ஒருவரான எரிக்கா, விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் நின்று விதவிதமாக போட்டோ எடுத்துக் கொண்டிருப்பதை பயணிகள் கண்டனர்.
என்ஜினுக்குள் எரிக்கா நிற்பதும், அவரை தோழி ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பதையும் பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விதவிதமாக புகைப்படம் எடுத்து முடித்த எரிக்கா, பின்னர் அவற்றை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தபடியே விமானத்தில் வந்து அமர்ந்தார். பின்னர் விமானம் புறப்பட்டுச் சென்றது.
எரிக்காவின் இந்த நடவடிக்கைகள் தொடர்பாக விமான நிர்வாகத்திடம் பயணிகள் புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து எரிக்கா விமானத்தின் என்ஜின் பகுதிக்குள் நிற்பது போன்ற தன்னுடைய புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கினார்.
எரிக்காவின் இந்த செய்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான நிர்வாகத்திடம் பயணிகள் முறையிட்டனர். இதையடுத்து எரிக்கா தன்னுடைய புகைப்படங்களை பேஸ்புக்கிலிருந்து நீக்கினார்.
ஆனபோதும், எரிக்காவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியதால், அவரை பணியில் இருந்து நீக்கி விமான நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து எரிக்காவின் சக ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘இது தொன்று தொட்டு நடைபெறும் வழக்கம் தான்' எனக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மேலும் பல ஊழியர்கள் தாங்களும் இது போல் விமானத்தில் எடுத்துக் கொண்ட வித்தியாசமான புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவு செய்து எரிக்காவிற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.