தமிழக வெள்ள நிவாரணத்திற்கு உதவ நல்ல என்.ஜி.ஓ.க்களை இவர்களுக்கு பரிந்துரைக்கலாமே!
சான் பிரான்சிஸ்கோ: தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
சென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட வெள்ள சேதம் உலக மக்கள் அனைவரையும் உலுக்கியது. புலம் பெயர் தமிழர்கள் பெருமளவில் வெள்ள சேதத்துக்கு உதவி வருகிறார்கள். தமிழக வெள்ள செய்தி வர ஆரம்பித்தவுடன் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்றம் வெள்ள நிவாரண பணிகளை செய்ய களமிறங்கியது.1 கோடி ரூபாய் தொகை திரட்டும் இலக்குடன், திரட்டிய தொகையை தமிழகத்தில் உள்ள பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் கைகோர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சென்றடையச் செய்யும் பணியும் முடுக்கிவிடப்பட்டது.

சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்ற தன்னார்வ தொண்டர்கள் கடந்த ஒரு மாதமாக இரவு பகலாக வெள்ள நிவாரண நிதி திரட்டவும், நிவாரண நிதியை சிறப்பாக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அடையாளம் கண்டு அவர்கள் மூலம் பணிகளை செய்யவும் பணியாற்றி வருகிறார்கள்.
தாயக வெள்ள சேதத்தை போக்க சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சிலிக்கான் வேலி தமிழர்கள் பெருமளவில் நிதி உதவி அளித்து வருகிறார்கள். அது மட்டுமன்றி சிறுவர்கள் மற்றும் தனிபட்ட மனிதர்கள் உறவினர் - நண்பர்களை ஒருங்கிணைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வளைகுடா பகுதி தமிழ் மன்றத்திற்கு நிதி திரட்டி வருகிறார்கள். உலகத்தமிழ் கல்வி கழகம் மற்றும் வளைகுடா பகுதி தமிழ் மன்றம் இணைந்து விழிப்புணர்வு நடை பயணம் செய்து சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி மக்களிடையே வெள்ள பாதிப்பு பற்றிய கவனத்தை கொண்டு வந்தனர்.
சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் உள்ள உணவகங்கள் Eat For a Cause என்ற பெயரில் தங்களது ஒரு நாள் வருமானம் முழுவதையும் சென்னை வெள்ள சேதத்திற்கு நிதி உதவியாக கொடுத்து உதவி வருகின்றனர்.
தமிழக வெள்ள சேதத்திற்கு நிதி உதவி அளிக்க தமிழ் அமைப்புகள் மட்டுமல்லாமல் தெலுங்கு அமைப்பு(Bay Area Telugu Association (BATA)), தெலுங்கானா அமைப்பு(Telangana Cultural Association), மலையாளிகள் அமைப்பு(Malayalee Association of Northern California) மற்றும் கன்னட அமைப்புகள்(Kannada Koota of Northern California)என பல்வேறு அமைப்புகள் வளைகுடா பகுதி தமிழ் சங்கத்துடன் இணைந்து செயல்படுகின்றன. அவர்கள் பெருமளவில் நிதி உதவியும் திரட்டி உதவி வருகின்றனர்.

அது மட்டுமன்றி வளைகுடா பகுதியில் உள்ள பல்வேறு கோவில்கள் (லிவர்மோர், கான்கார்ட், பிரிமாண்ட், மிலிபிடாஸ்) வெள்ள நிவராண நிதி திரட்ட உதவி வருகின்றன. மேலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது வளைகுடா பகுதி தமிழ் மன்றம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சிஸ்கோ, யாஹூ போன்ற நிறுவனங்களும் தமிழ் மன்றத்துடன் ஒருங்கிணைந்து தொகை திரட்டி வருகின்றனர்.
வெள்ள நிவாரணத்திற்கு திரட்டப்பட்ட நிதியை தமிழகத்தில் வெள்ள நிவாரணத்திற்கு உதவி செய்யும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் நல்ல திட்டங்களுக்கு நிதி உதவி செய்கிறது. பொது மக்கள் தங்களுக்கு தெரிந்த நல்ல என்.ஜி.ஓ. நிறுவனங்களை http://tinyurl.com/png6u3u என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.
வளைகுடா பகுதி தமிழ் மன்றத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தேர்வு செய்யும் குழுவினர் நீங்கள் குறிப்பிடும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொள்வார்கள். இதுவரை 50க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் தொடர்பில் உள்ளனர். எப்.சி.ஆர்.ஏ.அனுமதி பெற்ற நிறுவனங்களுக்கு மட்டும் உதவி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பூமிகா டிரஸ்ட் நிறுவனத்துடன் இணைந்து சென்னையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 குடிசைப் பகுதிகளுக்கு உடனடியாக உணவுப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யபட்டது. கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு உணவும் துணிமணிகளும் கொடுக்க இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் நிறுவனத்துடன் இணைந்து வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 225 பழங்குடி குடும்பங்களுக்கு உணவும் துணிமணிகளும் கொடுக்க சில்ட்ரன் வாட்ச்(Children Watch) நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றுகிறது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல கிராமங்களை உள்ளடக்கிய நீர் பிடிப்புப் பகுதிகளை வடிவமைத்து, நீரைப் பல கிராமங்களிடையே பகிர்ந்து விவசாயம் செய்ய உதவி வரும் தேசிய வேளாண் நிறுவனத்துடன் (National Agro Foundation) வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் இணைந்து செயலாற்றி வருகிறது. தேசிய வேளாண் நிறுவனத்தின் பணியின் மூலம் உயரமான இடத்தில் மழைகாலத்தில் கிடைக்கும் நீர் முறையாக சேமிக்கப்பட்டு பல கிராமங்களுக்கு வாய்க்கால்கள் மூலமும் பிற நீர்நிலைகள் மூலமும் சுமார் 1500 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு முழுமையாக சென்றடையும்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல நீர்நிலைகள் உடைக்கப்பட்டு ஒட்டு மொத்த நீர்பிடிப்பு அமைப்பும் சேதமடையும் நிலையில் உள்ளது. தேசிய வேளாண் நிறுவனம் இந்த நீர் நிலைகளைச் செப்பனிட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு உதவ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் முன்வந்துள்ளது. வெள்ளப் பாதிப்புகளிலிருந்து மக்களைக் காப்பாற்றும் இது போன்ற பல பணிகளைச் செயல்படுத்த வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தினர் இயங்கி வருகின்றனர்.
வட அமெரிக்காவில் இருப்பவர்கள் இந்த வெள்ளச் சேதத்துக்கு உதவ முன் வந்தால் http://tinyurl.com/huxwkgz என்ற பேபல் கணக்கு(paypal account)மூலம் உதவி செய்யலாம்.












Click it and Unblock the Notifications