தைவானில் பயங்கர நிலநடுக்கம்: பலமாடிக் கட்டிடங்கள் நொறுங்கின - 4 பேர் பலி
தைனன்: தைவான் நாட்டில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 10 மாத குழந்தை உள்பட நால்வர் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெற்கு தைவானின் தைனன் நகரில் அதிகாலை 4 மணியளவில் (உள்ளூர் நேரப்படி) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.4 ஆக ரிக்டர் அளவுகோளில் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால், நகரில் உள்ள 17 மாடிகளை கொண்ட 'வேய் குவான்' குடியிருப்பு கட்டடம் உள்பட பல கட்டடங்கள் சரிந்து விழுந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறி அடித்தப்படி தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சாலையோரங்களில் தஞ்சமடைந்தனர். இந்த விபத்தில் இதுவரை ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து ராணுவத்தினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இதுவரை இடிபாடுகளில் சிக்கி இருந்த சுமார் 250க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர். அதில், சுமார் 154க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவனமைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்துள்ள 90க்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட வேய் குவான் குடியிருப்பு கட்டடத்தில் சுமார் 400க்கும் மேற்பட்டோர் வசித்து வந்துள்ளனர். தற்போது மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அஞ்சப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தைனன் நகருக்கு அதிபர் மாய்ங்ஜியோ உடனடியாக விரைந்து வந்து மீட்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். மேலும், இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களை, மோப்ப நாய் உதவியுடன் மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
தைவானின் இரண்டாவது பெரிய நகரமான காவோசியுங் நகரில் இருந்து சுமார் 39 கிலோமீட்டர் தொலைவில் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தில் சிக்கியிருந்த சுமார் 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும், அவர்களில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்த பேரிடர் மீட்புக் குழுவினர், தொடர்ந்து அங்கே இடிபாடுகளை அகற்றும் பணியிலும், மக்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 1999ம் ஆண்டு தைவானை தாக்கிய 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்துக்கு சுமார் 2400 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications