ரஷ்யாவில் பயங்கரம்.. மருத்துவ கல்லூரி விடுதியில் கத்திக்குத்து தாக்குதல்! 4 இந்திய மாணவர்கள் காயம்
மாஸ்கோ: ரஷ்யாவின் உஃபா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த தாக்குதலில் 4 இந்திய மாணவர்கள் உள்பட பலர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்துள்ள மருத்துவ மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மாணவர்களின் நிலை குறித்து அறிய இந்திய தூதரக அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
ரஷ்யாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் ஏராளமான வெளிநாட்டவர்கள் பயின்று வருகிறார்கள். இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும் ரஷ்ய மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வருகிறார்கள்.

கத்திக் குத்து தாக்குதல்
உயர்தர வசதி, கட்டணம் குறைவு போன்றவை காரணமாக இங்கு அதிக எண்ணிக்கையில் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பலரும் ரஷ்யாவில் மருத்துவம் பயில ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில்தான், ரஷ்யாவில் உள்ள பாஷ்கோர்தோஸ்தான் மாகாணத்தில் உள்ள உஃபா நகரில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில், வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதி வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது.
4 இந்திய மாணவர்கள் காயம்
இந்த தாக்குதலில் 4 இந்திய மாணவர்கள் உள்பட பலர் காயம் அடைந்துள்ளனர். பல்கலைக்கழக தங்கும் விடுதியில் உள்ள விளையாட்டு அரங்கில் கத்திக் குத்து தாக்குதல் நடைபெற்று இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலைத் தடுக்க முயன்ற போது இரண்டு காவல்துறை அதிகாரிகளும் காயமடைந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய மாணவர்களின் நிலை என்ன
மாணவர்கள் தங்கியுள்ள விடுதி வளாகாத்திற்குள் கத்தியுடன் புகுந்த பதின்ம வயதுடைய இளைஞர் ஒருவர் மருத்துவ பல்கலைக்கழக விடுதிக்குள் நுழைந்து அங்கு தங்கியிருந்த மாணவர்களை தாக்கியுள்ளனர். போலீசார் பிடிக்க முயன்ற போது அந்த இளைஞர் தன்னைத்தானே கத்தியால் தாக்கி கொண்டுள்ளார்.
போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள். தாக்குதலுக்கு உள்ளான நபர்களின் தற்போதய நிலை குறித்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. ரஷ்யாவை பரபரப்புக்குள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
தாக்குதலுக்கான காரணம் என்ன?
ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகமும் உடனடியாக இந்த விவகாரம் குறித்து உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் ரஷ்ய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரிகளும் உஃபா நகருக்கு விரைந்துள்ளனர்.
தாக்குதல் நடைபெற்ற இடம் முழுவதும் ரத்தக்களறியாக காட்சி அளித்ததாக நேரில் பார்த்த மாணவர் ஒருவர் கூறினார். இந்த கொடூர நிகழ்வு நடைபெற்ற விடுதியை நோக்கி ஆம்புலன்ஸ்கள் சீறிப்பாயும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.
ரஷ்யாவில் நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் அங்கு பயின்று வரும் வெளிநாட்டு மாணவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கத்திக்குத்து தாக்குதலுக்கான காரணம் என்ன? ஏதேனும் நோக்கத்திற்காக இந்த தாக்குதல் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications