போரை தவிர வேறு வழியில்லையாம்.. வாயை விடும் பாக். அமைச்சர்! சின்ன பதிலடிக்கே சிதறுதே பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் தேவையில்லாமல் இந்தியப் பகுதிகளில் தாக்குதல் நடத்த முயன்று வருகிறது. ஏற்கனவே இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தான் திணறி வருகிறது. இதற்கிடையே இந்தியாவுடன் முழு வீச்சிலான போரைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை என்று வாயை விட்டுள்ளார் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்.!
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் இந்தியா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. வியாழன் மற்றும் வெள்ளி எனத் தொடர்ந்து இரண்டு நாட்கள் இரவு நேரங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இருப்பினும், இதை வெற்றிகரமாக முறியடிக்கும் இந்தியப் பாதுகாப்புப் படைகள், அதற்குத் தக்க பதிலடியும் கொடுத்து வருகின்றன.

திணறும் பாகிஸ்தான்
இந்தியாவின் பதிலடியை பாகிஸ்தானால் சமாளிக்கவே முடியவில்லை. பாகிஸ்தான் மிக மோசமாகத் திணறி வருகிறது. ஆனாலும், பாகிஸ்தான் அமைச்சர்கள் தொடர்ச்சியாகப் பேட்டிகளை அளித்து, வலிமையாக இருப்பது போல ஒரு பொய்யான பிம்பத்தை உருவாக்க முயன்று வருகிறார்கள். சர்வதேச மீடியாக்களில் பொய் சொல்லி மாட்டிக் கொண்டு அசிங்கப்படும் நிகழ்வுகளும் கூட தொடர்ந்து நடந்துள்ளது.
போர் வேண்டுமாம்
இதற்கிடையே இந்தியா உடனான முழு வீச்சிலான போரைத் தவிர வேறு ஆப்ஷன் எதுவும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஆசிப், "கடந்த நான்கு நாட்களில் நடந்து வரும் விஷயங்களை வைத்துப் பார்த்தால் இந்தியா உடனான முழு வீச்சிலான போரைத் தவிர வேறு ஆப்ஷன் எதுவும் இல்லை.. பதற்றத்தைத் தணிக்க வாய்ப்புகள் மிகக் குறைவாகவே தெரிகிறது" என்றார்.
கவாஜா ஆசிப்
பாகிஸ்தான் ராணுவத்திடம் என்ன திட்டம் உள்ளது.. என்ன செய்கிறது என்பது குறித்து எந்தவொரு தகவலையும் அவர் பகிரவில்லை. அதேநேரம் பாகிஸ்தான் மக்கள் தங்கள் ராணுவத்தைச் சந்தேகப்படக்கூடாது என்று மட்டும் கூறினார். இந்தியா உடன் போரை ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகவே பாகிஸ்தான் இதுபோல செய்து வருவது அமைச்சர் கவாஜா ஆசிப் பேச்சை வைத்துப் பார்த்தால் தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இந்தியா தற்போது நடத்தும் முதற்கட்டப் பதிலடிகளைச் சமாளிக்கவே பாகிஸ்தானால் முடியவில்லை.
வினோதமான விளக்கம்
ஆனால், அதற்கும் கூட பாக். பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஒரு வினோதமான விளக்கத்தைக் கொடுத்துச் சமாளித்தார். அதாவது இந்திய ட்ரோன்களை இடைமறித்தால் பாகிஸ்தான் பாதுகாப்பு மையங்கள் எங்கே இருக்கிறது என தெரிந்துவிடும். இதன் காரணமாகவே இந்திய ட்ரோன்களை தாக்கவில்லை என்று யாருமே எதிர்பார்க்காத ஒரு விளக்கத்தை அவர் கொடுத்தார். இதுபோல ஒரு வினோதமான விளக்கத்தை யாருமே கொடுத்ததில்லை. இதைக் கேட்டுப் பாதுகாப்பு வல்லுநர்களே கூட ஷாக் ஆனார்கள். மேலும், சமூக வலைத்தளங்களிலும் பலரும் கவாஜாவை வறுத்தெடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பாகிஸ்தான்
இந்தியாவின் பல்வேறு இடங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இருப்பினும், எஸ்400 உட்பட பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் இந்தியாவில் உள்ளதால் பாக். தாக்குதல்களை இந்தியா வெற்றிகரமாக முறியடித்து வருகிறது. மேலும், இந்தியா எந்த இடத்திலும் முதலில் தாக்குதலை ஆரம்பிக்கவில்லை. அதேநேரம் பாகிஸ்தான் தாக்குதலுக்குத் தக்கப் பதிலடியை இந்தியப் பாதுகாப்புப் படைகள் கொடுத்து வருகிறது.











Click it and Unblock the Notifications