பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வழிதான் என்ன? ஜி20 நாடுகள் எடுத்துள்ள அதிமுக்கிய முடிவு
ரோம்: புவி வெப்ப மயமாதல் மிகப் பெரிய ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இதனை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்த ஜி 20 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இத்தாலி தலைநகர் ரோம் நகரத்தில் ஜி20 உச்ச மாநாடு தற்போது நடைபெறுகிறது. உலகின் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் இந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் பருவநிலை மாற்றம், கொரோனா பாதிப்பு போலச் சர்வதேச அளவில் எதிரொலிக்கும் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பருவநிலை மாற்றம் காரணமாக ஜெர்மனி, சீனா உள்ளிட்ட நாடுகளில் மிகப் பெரிய அளவுக்கு வெள்ளம் ஏற்பட்டது. அதேபோல கனடாவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஜி20 மாநாடு
கொரோனா பாதிப்பு தொடங்கிய பிறகு ஜி20 தலைவர்கள் நேரடியாகக் கலந்து கொள்ளும் முதல் உச்சி மாநாடு இதுவாகும். இந்த கூட்டத்தில் பெரும்பாலான தலைவர்கள் நேரடியாகவே பங்கேற்றனர். அமெரிக்க அதிபர் பைடன், பிரதமர் மோடி எனப் பல சர்வதேச தலைவர்களும் ரோமிற்கு வந்துள்ளதால் அங்கு உயர் அடுக்கு பாதுகாப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனா அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் ஆகிய இருவர் மட்டும் இந்த மாநாட்டில் நேரடியாகக் கலந்து கொள்ளாமல் காணொளி வழியாகக் கலந்து கொண்டனர்.

புவியின் வெப்பம்
தற்போது புவிவெப்ப மயமாதலும் அதனால் ஏற்படும் பருவநிலை மாற்றமும் சர்வதேச அளவில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் ஜி20 மாநாட்டில் இது குறித்தே முக்கியமாக ஆலோசிக்கப்பட்டது. தற்போது புவிவெப்ப மயமாதல் மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதால் 2015 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்த அளவை விடப் புவியின் வெப்பத்தைக் குறைக்க ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

1.5 டிகிரி செல்சியஸ்
அதன்படி புவியின் வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க ஜி 20 நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1.5 டிகிரி செல்சியஸ் வரை புவியின் வெப்பத்தைக் குறைப்பது என்பது எட்டக்கூடிய இலக்கு தான் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பருவநிலை மாற்றம் என்பது சர்வதேச அளவில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், சர்வதேச தலைவர்களின் இந்த முன்னெடுப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

80% கார்பன்
முன்னதாக. புவியின் வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க வேண்டும் என்பதில் அனைத்து நாடுகளிடமும் ஒருசேரக் கருத்து இல்லாமல் இருந்தது. பின்னர் கடைசி நேரத்தில் ஒப்பந்தங்கள் மாற்றியமைக்கப்பட்ட பின்னரே அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டன. உலகின் 80 சதவிகித கார்பன் உமிழ்வு, ஜி 20 நாடுகளில் இருந்தே வெளிவருகிறது. இதைக் குறைக்க இந்த ஒப்பந்தம் உதவும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தாலி பிரதமர்
இது குறித்து இத்தாலி பிரதமர் மரியோ டிராகி கூறுகையில், "இன்று எடுக்கப்பட்ட முடிவுகள் அடுத்து நடைபெறும் கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டின் நேரடியாக எதிரொலிக்கும். எனவே, இங்கு நாம் எடுக்கும் முடிவுகள் முக்கியமானது. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தைப் போல நீண்டகால இலக்குகள் நமக்குத் தேவை. அதேபோல அதை எட்டுவதற்குக் குறுகிய கால இலக்குகளை நிர்ணயித்து திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications