இது புத்தர், காந்தியின் பூமி.. இந்திய ஜி20 மாநாட்டில் உலக அமைதி உறுதியாகும்..பிரதமர் மோடி நம்பிக்கை
ஜகார்த்தா: அடுத்த ஆண்டு இந்தியாவில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில்‛‛புத்தர், காந்தி வாழ்ந்த பூமியில் நடக்கும் ஜி20 மாநாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்கான வலுவான செய்திக்காக உறுதியேற்போம் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
உலகில் உள்ள நாடுகள் பல்வேறு கூட்டமைப்புகளாக செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் உள்நாட்டு, பிராந்திய பாதுகாப்பை நாடுகள் உறுதி செய்து வருகின்றன. அதேபால் வர்த்தகம் சார்ந்த உறவுகளையும் பலப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் தான் உலக பொருளாதாரத்தில் நிலவும் சிக்கல்களை களையும் வகையில் வளர்ச்சியடைந்த, வளரும் நாடுகளின் கூட்டமைப்பாக ஜி20 அமைப்பு உள்ளது.
உஷாரா இருக்கணும்.. பேரழிவை தந்த 2ம் உலகப்போர்.. ஜி20 மாநாட்டில் உலக நாடுகளை எச்சரித்த பிரதமர் மோடி
ஜி20 நாடுகள்
இந்த ஜி20 நாடுகளில் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, உருசியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, தென்கொரியா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்ந மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகளின் அதிபர், பிரதமர் அல்லது அமைச்சர்கள் பங்கேற்பார்கள்.
இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு
அந்த வகையில் தற்போதைய ஜி20 உச்சிமாநாடு இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள ஓட்டலில் இன்று துவங்கிய ஜி20 மாநாடு நாளை வரை 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா சென்றுள்ளார். அதேபோல் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பாலி நகருக்கு சென்று பங்கேற்றுள்ளனர்.
பிரதமர் மோடி பேச்சு
இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது பல்வேறு விஷயங்கள் பற்றி பிரதமர் மோடி எடுத்துரைத்தார். உக்ரைன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். கொரோனா தொற்று பரவலுக்கு பிறகான உலகை கட்டமைக்கும் பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் உள்ளது என பிரதமர் மோடி பேசினார். மேலும் உணவு பாதுகாப்பு, எரிசக்தி பாதுகாப்பு பற்றி பிரதமர் மோடி பேசினார்.
புத்தர்-காந்தி பிறந்த மண்
அதோடு அமைதி, நல்லிணக்கம், தேச பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தீர்மானங்கள் இப்போது மிகவும் முக்கியமானது. புத்தர் - காந்தி வாழ்ந்த புனித பூமியில் ஜி20 உச்சிமாநாடு நடக்கும்போது உலகில் அமைதியை நிலைநிறுத்த உறுதியான மற்றும் நிலையான செய்தியை வெளிப்படுத்துவோம் என்பதை நம்புகிறேன் என பிரதமர் மோடி பேசினார். ஜி 20 அமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாடுகளில் சுழற்சி முறையில் வகித்து வருகிறது. அதாவது ஜி20 உச்சிமாநாடு அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. இதனை குறிப்பிட்டு தான் பிரதமர் மோடி, புத்தர், காந்தி வாழ்ந்த பூமியில் நடக்கும் ஜி20 உச்சிமாநாட்டில் உலக அமைதிக்ககான தகவலை இன்னும் அழுத்தமாக கடத்துவோம் என பிரதமர் மோடி பேசினார்.
நாளை தலைமைத்துவம் ஒப்படைப்பு
இந்த ஜி20 மாநாடு நாளை முடிவடைய உள்ளது. இந்த மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியின்போது ஜி20 அமைப்பின் தலைமைத்துவம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிரதமர் நரேந்திர மோடியிடம் தலைமைத்துவத்தை ஒப்படைக்க உள்ளார். முன்னதாக ஜி20 கூட்டமைப்புக்கு தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில் அதற்கான லோகோ, கருப்பொருள் ஆகியவற்றை பிரதமர் மோடி வெளியிட்டிருந்தார். இதுபற்றி பிரதமர் மோடி கூறுகையில், ‛‛ஜி20 இலச்சின் என்பது ஒரு செய்தி. இந்தியாவின் நரம்புகளில் ஓடும் உணர்வு. உலகளாவிய சகோதரத்துவத்தின் சிந்தனையை தான் ஜி20 இலச்சினை பிரதிபலிக்கிறது. இலச்சினையில் உள்ள தாமரை இந்தியாவின் பண்டைய பாரம்பரியம், நம்பிக்கை மற்றும் சிந்தனையை குறிக்கிறது. அத்வைத்தின் தத்துவம், அனைத்து உயிரினங்களின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. இந்த தத்துவம் இன்றைய மோதல்களைத் தீர்க்கும் ஊடகமாக இருக்கும்'' என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.