"இனப்படுகொலை.." ஹசீனாவுக்கு புதிய தலைவலி.. உள்ளே வரும் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்! பரபரப்பு
டாக்கா: வங்கதேசத்தில் நடந்த மாணவர் போராட்டத்தில் பலரும் உயிரிழந்தனர். மாணவர் போராட்டத்தின் போது நடந்த வன்முறைகள் மற்றும் மரணங்களை இப்போது வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரிக்கிறது. இதற்கிடையே வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா மற்றும் அவரது அரசின் மீது இனப்படுகொலை புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் இன்று விசாரணையும் தொடங்குகிறது.
வங்கதேசத்தில் கடந்த ஜூலை மாதம் தொடங்கி ஒரு மாதம் மிக மோசமான சூழல் நிலவியது. அந்நாட்டு அரசுக்கு எதிராக மாணவர்கள் வீதிகளில் இறங்கித் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அடுத்த சிக்கல்: ஒரு கட்டத்தில் நிலைமை கையை மீறிச் செல்லவே ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவிற்குத் தப்பி வந்துவிட்டார். இருப்பினும், அதன் பிறகும் அங்கே ஹசீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஹசீனாவுக்கு இப்போது அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஹசீனா மற்றும் அவரது அருக்கு எதிராக வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் இனப்படுகொலை குறித்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளது. ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரை வங்கதேசத்தில் நடந்தது இனப்படுகொலை என்றும் மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றும் கூறி குற்றவியல் தீர்ப்பாயம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இனப்படுகொலை: வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா, அவாமி லீக் பொதுச் செயலாளரும் முன்னாள் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சருமான ஒபைதுல், முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமல் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதைப் புகார்தாரரின் வழக்கறிஞர் காசி எம்.எச்.தமீம் உறுதி செய்துள்ளார்.
இனப்படுகொலை குறித்த வழக்கு விசாரணை இன்று தொடங்கியுள்ளது. அவாமி லீக் மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களின் பெயர்களும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாணவர் போராட்டத்தில் உயிரிழந்த ஒன்பதாம் வகுப்பு மாணவரான ஆரிப் அகமது சியாமின் தந்தை புல்புல் கபீர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
குற்றவியல் தீர்ப்பாயம்: மாணவர் போராட்டம் உச்சத்தில் இருந்த ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 5 வரை நடந்த படுகொலைகள் குறித்த வழக்குகளை வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் விசாரிக்கும் என அங்குப் பொறுப்பேற்றுள்ள இடைக்கால அரசு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்து இருந்தது. அதற்கு மறுநாள் அதாவது புதன்கிழமையே இந்த இனப்படுகொலை புகார் வந்துள்ளது.
இது தவிர கடந்த 2015ஆம் ஆண்டில் ஒரு வழக்கறிஞரைக் கடத்திய குற்றச்சாட்டில் ஹசீனா மற்றும் அவரத அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் தனியாகப் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த செவ்வாய்க்கிழமை ஹசீனா மற்றும் ஆறு பேர் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹசீனா மற்றும் அவாமீ லீக் கட்சிக்கு எதிராகப் புகாரளிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
உயிரிழப்புகள்: வங்கதேசத்தில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய மாணவர் போராட்டம் மெல்ல ஹசீனாவுக்கு எதிரான போராட்டமாக மாறியது. இந்த போராட்டத்தை ஒடுக்க ஹசீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இருப்பினும், எதுவும் பலன் தரவில்லை. இந்த போராட்டங்களில் 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications