விவசாயிகள் போராட்டத்திற்கு ஐரோப்பிய நாடுகளில் பெருகும் ஆதரவு… ஜெர்மனி தமிழ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ஜெர்மனியில் தமிழ் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
பிராங்பர்ட்: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு உலகம் முழுவதில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.
பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; வறட்சி நிவாரணம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 28 நாட்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் கோரிக்கை என்ன என்று கேட்பதற்கு கூட மோடி அரசு தயாராக இல்லை. தொடர்ந்து விவசாயிகள் ஆட்சியாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் மீசை வழித்து, மொட்டை அடி, எலி கறி தின்று, பாம்பு கறி தின்று போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ஜெர்மனி தமிழர்கள்
அவர்களுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து ஜெர்மனிக்கு சென்று வசித்து வரும் தமிழர்கள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டம்
பிராங்பர்ட் நகரத்தின் மையப் பகுதியில் தமிழ் சங்கம் சார்பில் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமியர் என்று 50க்கும் மேற்பட்டோர் கூடி விவசாயிகளுக்கு ஆதரவான பேனர்களை கையில் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றும்படி கோஷங்களை எழுப்பினர்.

பிரதமரிடம் மனு
மேலும், விவசாயிகளின் போராட்டம் குறித்து, ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் அனைவரும் கையெழுத்திட்ட மனு ஒன்றை ஜெர்மனியின் பிரதமரிடம் வழங்க முடிவு செய்துள்ளதாகவும் ஜெர்மனி வாழ் தமிழ் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம்
இதே போன்று ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகத்தில் கொழுந்துவிட்டு எரிந்த போது அதற்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழ் சங்கத்தினர் தொடர் போராட்டத்தை நடத்தி ஆதரவு தெரிவித்தனர். அதே போன்று தற்போது விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications