செவ்வாயில் கண்ணாடி... உயிர் இருந்திருக்கலாம் என நம்பலாம்.... விஞ்ஞானிகள்
லண்டன்: செவ்வாய் கிரகத்தில் கண்ணாடி படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அங்கு உயிர்கள் இருந்திருக்கலாம் என்பதற்கு மேலும் ஓர் ஆதாரம் கிடைத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
செவ்வாய் கிரகம் தொடர்பாக சர்வதேச அளவில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு மனிதர்களைக் குடியமர்த்துவது தொடர்பாக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ‘மார்ஸ் ரெகொனெஸ்ஸன்ஸ் ஆர்பிடர்' எனும் விண்கலம் செவ்வாய் கிரகம் தொடர்பாக சில தகவல்களை அளித்தது. அதனடிப்படையில் பிரவுன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

கண்ணாடி படிமங்கள்..
அந்த ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் உள்ள குகைகளில் கண்ணாடி படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு உயிர்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.

விண்கற்கள் மோதி...
இது தொடர்பாக பிரவுன் பல்கலைக்கழக ஆய்வாளர்களில் ஒருவரான கெவின் கேனான் கூறுகையில், ‘மிகப் பெரிய விண்கற்கள், செவ்வாயின் மீது மோதியிருக்கலாம். அப்போது அங்கிருந்த சில பாறைகள் உருக ஆரம்பித்திருக்கலாம்.

இம்பாக்ட் கிளாஸ்...
உருகிய பாறைகள் மிக விரைவாக குளிர்ந்து அவை கண்ணாடித் துண்டுகளாக மாறியிருக்கலாம். இவற்றை `இம்பாக்ட் கிளாஸ்' என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.

தடயங்கள்...
இந்த கண்ணாடி படிமங்களில் உயிர் வாழ்வதற்குத் தேவையான சில காரணிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளன. செவ்வாயில் உயிர்கள் இருந்திருந்தால் அவற்றின் தடயங்கள் இந்த கண்ணாடித் துண்டுகளில் நிச்சயம் பதிவாகியிருக்கும்.

ஆழமான ஆய்வு...
அந்த கண்ணாடித் துண்டுகளை இன்னும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்தினால் மேலும் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புண்டு' என்கிறார். இந்த ஆய்வு முடிவுகள் சமீபத்தில் ‘ஜியாலஜி' என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications