6 ஆண்டு காதல்... கண்ணாடி முன் நின்றபடி தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட யு.கே. பெண்
லண்டன்: வேறொரு ஆணையோ அல்லது பெண்ணையோ தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்ள விரும்பாத பெண் ஒருவர், தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட விநோதச் சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.
ஆணும், பெண்ணும் திருமணம் எனும் பந்தம் மூலம் இணைந்து வாழ்க்கையை வழி நடத்த வேண்டும் என்பது நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த வழக்கம். ஆனால், சிலர் அதிலிருந்து வேறுபட்டு ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களையே திருமணம் செய்து கொள்வதுண்டு.
இத்தகைய ஓரினச் சேர்க்கை திருமணங்களுக்கு இன்னும் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இவர்கள் அனைவரிலிருந்தும் வேறுபட்டு தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளார் இங்கிலாந்து பெண் ஒருவர்.
போட்டோகிராபர்...
இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் இளம்பெண் கிரேஸ் ஹெல்டர். போட்டோகிராபரான இவருக்கு வேறு ஒரு ஆணுடனோ, அல்லது பெண்ணுடனோ திருமணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்ற எண்ணம் இல்லையாம்.
6 ஆண்டுக் காதல்...
இதனால், கடந்த 6 ஆண்டுகளாக தனக்கு தானே காதலை வளர்த்துக் கொண்டு வந்துள்ளார். தன் காதலின் அடுத்த கட்டமாக தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது என முடிவெடுத்தார்.
திருமண அறிவிப்பு...
அதன்படி, லண்டனில் உள்ள ஒரு பூங்காவில் தனியாக அமர்ந்து கொண்டு தனது திருமணத்தை அறிவித்தார் கிரேஸ். பின்னர், தன் திருமணத்துக்கு தேவையான மணப்பெண் உடை மற்றும் மோதிரம் வாங்கியுள்ளார்.
தடபுடல் விருந்து...
நிச்சயிக்கப்பட்டபடி, தனது திருமண நாளன்று டேவன் என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என 50 பேரை சமீபத்தில் அழைத்து, அவர்களுக்கு தடபுடலாக விருந்து அளித்தார்.
தனக்குத் தானே திருமணம்...
பின்னர் கண்ணாடி முன்பு நின்று கொண்டு தனக்குத் தானே மோதிரத்தை அணிவித்து திருமணம் செய்து கொண்டார் கிரேஸ். பிறகு கண்ணாடியில் தோன்றிய தனது உருவத்துக்கு தானே முத்தம் கொடுத்து அன்பையும் பறிமாறிக் கொண்டார்.
வித்தியாசமான அனுபவம்...
கிரேசின் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், இது வித்தியாசமான திருமண அனுபவத்தைப் பார்த்த அனுபவத்தைத் தந்ததாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications